Tuesday 15 July 2008

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை :(

இது ஒரு மீள் பதிவுடன் புதிதாக ஒரு சிறு குறிப்பும் :).






ஆடி பிறப்புக்கு நாளை விடுதலை என்று நவாலியூர் சோமசுந்தரப்புலவர் என்னவோ பாடி விட்டார். என்னக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சனி, ஞாயிறு தினங்களில் வந்த ஆடிப்பிறப்பை தவிர ஏனைய ஆடிப்பிறப்புக்களுக்கு எமக்கு விடுமுறை எல்லாம் இல்லை. அப்பா, அம்மா இருவரும் வேலை செய்பவர்கள் ஆகையால் அதிகாலையில் எழுந்து உரலில் மா இடித்து கூழ் வைத்து, கொழுக்கட்டை அவித்து சாப்பிட்டு விட்டு பள்ளிகூடம் போய் தான் பழக்கம்.


ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

-நவாலி சோமசுந்தரப்புலவர்




பாடல்: VSK கானா பிரபா ஆகியோரின் பதிவில் இருந்து.


ஆடி பிறப்பை நினைவுபடுத்திய கானா பிரபாவுக்கு நன்றி.

3 comments:

said...

ஓ பதிவு வந்திட்டுதா ;-) காலம் கடந்து தான் கண்ணில் பட்டது. மீளப் பதிந்ததற்கு மிக்க நன்றி. உங்கட பதிவு ஒன்றுதான் ஆடிக்கூழோட இருக்கும் வலையுலகின் ஒரே பதிவு. அதுக்கும் வாழ்த்துக்கள்.

said...

ம்ம்ம்...இந்தப் பதிவை வாசிக்கேக்கதான் ஆடிப்பிறப்பெண்ட சாமாச்சாரமே இருக்கிறதா நினைவு வருது. சின்ன வயசில அம்மா கொழுக்கட்டை அவிப்பா. இப்ப இந்த நகர வாழ்க்கையில எல்லாமே நினைவுகளாய் அடிமனதிலதான் இருக்கு.

அது ஒரு அழகிய கனாக்காலம்...

மதுவதனன் மௌ.

said...

கானா பிரபா, மதுவதனன் மௌ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி