Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Sunday, 3 August 2008

யாழ்ப்பாணத்து விலைப்பட்டியல்

யாழ்ப்பாண குடா நாட்டில் உணவு பொருட்களின் அண்மைய விலை பட்டியல். அடைப்பு குறிக்குள் இருப்பது 2004-2005 ஆண்டு காலப்பகுதியில் இருந்த விலைகள்.

1. அரிசி வகை

1 கிகி சம்பா: 115 (45)ரூபா
1 கிகி சிவத்தை பச்சை : 110 (40)ரூபா
1 கிகி நாட்டு புழுங்கல் : 110 (40-42)ரூபா
1 கிகி வெள்ளை அரிசி : 95 (30) ரூபா

2. 1 கிகி சீனி (சர்க்கரை) : 90 (35- 40)ரூபா

3. 1 கிகி உழுந்து: 130 (70) ரூபா

4. 1 கிகி பயறு : 150 (65-70) ரூபா

5. 1 கிகி சிந்தாமணி கடலை : 150- 180 (75-90) ரூபா

6. 1 கிகி மைசூர் பருப்பு : 150 (50) ரூபா

7. 1கிகி மஞ்சள் பருப்பு : 50-60 (160) ரூபா

8. 1 கிகி செத்தல்(காய்ந்த) மிளகாய்: 240 (150-180) ரூபா

9. 1 கிகி மல்லி : 350-360 (110 )ரூபாய்

10. 1 கிகி கோதுமை மா (மைதா) : 80 (40) ரூபா

11. 750 மிலீ நல்லெண்ணேய் : 500 (200? ) ரூபா

12. 1 லீ தேங்காய் எண்ணேய்: 310 (125) ரூபா

13. 1 லீ மரக்கறி எண்ணேய் (Palm oil) : 250 (115) ரூபா

14. பால் மா வகை

400 கி அங்கர் : 300 (?)ரூபா

400 கி லக்ஸ்பிறே: 285 (?) ரூபா

400 கிராம் மில்குரோ : 285 (?) ரூபா
400 கிராம் நெஸ்டமோல்ட்: 255 (?) ரூபா

400 கிராம் ஹோர்லிக்ஸ் : 230 (? ) ரூபா

400 கிராம் வீவா: 230 (?) ரூபா

சவர்காரம் (Soap)

15. அழகு

1 லக்ஸ் : 35 (18) ரூபா

1 ரெக்ஸோனா : 35 (18) ரூபா

1 குழந்தைகளுக்கான : 32 (?) ரூபா

16. துணி துவைக்க

1 சன்லைட்: 32 (14) ரூபா

17. சலவை தூள்

80 கி சேர்வ் எக்சல் : 28 (?) ரூபா

150 கி சேர்வ் எக்சல்: 50 (?) ரூபா

500 கி சேர்வ் எக்சல்: 150 (?) ரூபா

மாட்டு தீவனம்

1 கிகி தவிடு : 65 (20) ரூபா

1 கிகி தேங்காய் புண்ணாக்கு : 70 (25) ரூபா

Tuesday, 29 July 2008

No Peace, No War

போஸ்டன் ரிவியு இல் வந்த நீண்ட இந்த கட்டுரை ஈழப்பிரச்சனையின் சாராம்சத்தை என் அறிவுக்கு எட்டியவகையில் ஓரளவு சரியாக சொல்கிறது போல் தெரிகிறது.

No Peace, No War
Have international donors failed Sri Lanka’s most vulnerable?

Alan Keenan

8 When I arrived last summer at the burial ceremony the ten crude wooden coffins were lined up on the concrete floor. A bare-chested Hindu priest was chanting Sanskrit verses and preparing the offerings, an assortment of freshly chopped coconuts, leaves and flowers, oil, water, and brightly colored pastes for family members to place on the coffins bearing the remains of their loved ones. As the rain gently beat on the roof of the small open-sided structure, oil lanterns of chopped coconut shells were set in front of each casket. Families began circling the coffins, sometimes joining in on the prayers, mostly remaining silent. The tears were few, though one mother broke down every time it was her turn to anoint the coffin of her son.

A hundred yards away workers had just finished digging the graves. The families followed the coffins as the sarong-clad workers carted them unceremoniously across the muddy grounds. After the burial the families boarded two white vans provided by the International Committee of the Red Cross and began their journey home to the Tamil areas in the north and east of Sri Lanka.

Colombo’s Borella Public Cemetery is filled with ornate tombstones, Christian, Buddhist, and Hindu, some inlaid with photographs of the deceased. The newly dug graves, however, are likely to remain unmarked. They contain the badly decomposed remains of ten young Tamil men, victims of Sri Lanka’s long civil war between the Sinhalese-dominated government and the separatist Tamil Tigers. The men were murdered almost four years earlier in one of Sri Lanka’s most celebrated—if now largely forgotten—massacres.

On the morning of October 25, 2000, in the quiet central hill-country village of Bindunuwewa, a mob of Sinhalese villagers and residents from the nearby town of Bandarawela stormed the government “rehabilitation” center. The minimum-security center housed 41 young Tamil men who had either surrendered to the army after being involved with the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) or been arrested on suspicion of involvement with the Tigers. While none detained at the Bindunuwewa camp were considered serious security risks, the stigma alone of being associated with the Tigers can inflame tensions in Sinhalese areas of Sri Lanka. An altercation in the camp one evening between some inmates and Sinhalese officers launched a rumor that spread quickly with help from local police: “The Tigers are attacking.” Early the next morning a crowd of hundreds, perhaps thousands, had assembled. Armed with knives and poles and gasoline, the mob hacked and burned to death 27 of the Tamil inmates. Some 60 police officers sent the previous evening and earlier that morning to guard the camp made no effort to stop the attack. Instead, some fired on inmates trying to escape, killing one and injuring two others. No one was arrested.

;
;
இது நீண்ட கட்டுரை மிகுதியை இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்

Tuesday, 22 July 2008

சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல்

சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல்

தேவையான பொருட்கள்

ஒன்று/ இரண்டு பேருக்கு

4 - மேசைக்கரண்டி தயிர்

1 - பெரிய கத்தரிக்காய்







* சுட்ட சம்பலின் நிறம் வெளிர்ப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் வேள்ளை கத்தரிக்காய் தான் நன்றாக இருக்கும்.

* வெள்ளை கிடைக்கவில்லை என்றால் ஊதா கத்தரிக்காய் பாவிக்கலாம். நீண்ட கத்தரிக்காயை தான் பெரிய கத்தரிக்காய் என சொல்லியுள்ளேன்.





நீண்ட கத்தரிக்காய் கிடைக்கவில்லையென்றால் சிறிய வெள்ளை/ ஊதா கத்தரிக்காயும் பாவிக்கலாம். நான் சிறிய கத்தரிக்காயை தான் பாவித்து செய்தேன்.

5-6 - சிறிய வெங்காயம்
2 - பச்சை மிளகாய்
1/2- தே. கரண்டி மிளகு
சுவைக்கு- உப்பு
அலுமினியத் தாள்


செய்முறை


1. போறணை/ Oven ஐ 230 பாகை செல்சியல்லில் சூடாக்கவும்

2. கத்தரிக்காய் மூழை நீக்கி அலுமினியத தாளினால் முழுமையாக மூடி சுற்றவும். சுற்றியபின் முள்ளுகரண்டி (Fork) மூலம் இரண்டு மூன்று இடங்களில் குற்றி தூளை செய்யவும் (இது நீராவி வெளியேற உதவும்)





3. கத்தரிக்காயை சூடான Oven இல் 25- 30 நிமிடம் சுடவும்



4. கத்தரிக்காய் சுடும் நேரத்தில் வெங்காயம், பச்சை மிளகாயை மிகச்சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்



5. 25-30 நிமிடங்களின் பின் கத்தரிக்காயை வெளியே எடுத்து சிறிது குளிர்ந்ததும் அலுமினியம் தாளை அகற்றவும்.




( கீழே உள்ள படத்தில் உள்ளது போல் தோல் சுருங்கி வரும். நான் வெள்ளை நிற பெரிய கத்தரிக்காய் இங்கு கிடைக்காதாதால் ஊதா நிற சிறிய கத்தரிக்காயை பாவித்தேன். இப்படி கபில நிறமாக வருவதை விரும்பாதவர்கள் வெள்ளை கத்தரிக்காயை பாவிக்கலாம்.)






6. மேலும் கையால் தோலை உரிக்கக்கூடிய சூடு வரும் வரை குளிர விட்டு தோலை உரித்து கொள்ளவும்

7. சிறிய கத்தரிக்காய் என்றால் 4 ஆக, பெரிது என்றால் 8 ஆக பிளந்து சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.

8. அரிந்த கத்தரிக்காயுடன், அரிந்து வைத்த வெங்காயம், மிளகாய், உப்பு, மிளகுத்தூள் என்பனவற்றை சேர்த்து கலக்கவும்





9 இறுதியில் தயிரை சேர்த்து நன்கு கலந்தால் சுவையான சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல் தயார்

இதனை சோற்றுடன் உண்ணல்லாம்.






குறிப்பு.

1. ஊரில் தயிரிற்கு பதிலாக இதற்கு தேங்காய்ப்பால் (முதற்பால்) சேர்த்து செய்வார்கள்
2. தயிரிற்குபதிலாக sour cream உம் பாவிக்க முடியும்



நீங்களும் தயிரிற்கு பதிலாக தேங்காய்ப்பால்/ sour cream பாவித்து செய்து பார்த்து எது சுவையானதோ அதை தொடருங்கள்.


3. கத்தரிகாய் சுடுவதற்கு தேவையான நேரம், கத்தரிக்காயின் பருமன், Oven இன் வகை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபடும். 20 நிமிடத்தின் பின் வெளியே எடுத்து திறந்து பார்த்து படத்தில் காட்டியுள்ளது போல் தோல் சுருங்கி வந்திருந்தால் வெளியே எடுக்கலாம். இல்லாது விடின் மீண்டும் மூடி 5- 10 நிமிடம் சுடவும்.






Tuesday, 15 July 2008

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை :(

இது ஒரு மீள் பதிவுடன் புதிதாக ஒரு சிறு குறிப்பும் :).






ஆடி பிறப்புக்கு நாளை விடுதலை என்று நவாலியூர் சோமசுந்தரப்புலவர் என்னவோ பாடி விட்டார். என்னக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சனி, ஞாயிறு தினங்களில் வந்த ஆடிப்பிறப்பை தவிர ஏனைய ஆடிப்பிறப்புக்களுக்கு எமக்கு விடுமுறை எல்லாம் இல்லை. அப்பா, அம்மா இருவரும் வேலை செய்பவர்கள் ஆகையால் அதிகாலையில் எழுந்து உரலில் மா இடித்து கூழ் வைத்து, கொழுக்கட்டை அவித்து சாப்பிட்டு விட்டு பள்ளிகூடம் போய் தான் பழக்கம்.


ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

-நவாலி சோமசுந்தரப்புலவர்




பாடல்: VSK கானா பிரபா ஆகியோரின் பதிவில் இருந்து.


ஆடி பிறப்பை நினைவுபடுத்திய கானா பிரபாவுக்கு நன்றி.

Wednesday, 2 July 2008

யாழில் இருந்து லங்கா முடித்தவில் திருமலைக்கு - 1

யாழ் குடா நாடு 95 இல் இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த பின் யாழ் குடா மக்களுக்கான பாதையாக இருந்து வந்த, அதே நேரம் பல பேரை பலி கொண்டதுமான கிளாலி பாதையூடான பயணம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் யாழ் மக்களுக்கான போக்கு வரத்துக்கு காங்கேசன் துறையில் இருந்து திருகோணமலைவரையான கப்பல் மார்க்கமும், பலாலியில் இருந்தான விமான பயணமுமே அமைந்திருந்தது. முதலில் கப்பலிலும், பின்னர் விமானத்திலும் பயணம் செய்திருக்கிறேன். அந்த பயணங்களை மேற்கொள்ள முன்னர் நாம் பட்ட அலைச்சல்கள் கொஞ்ச நஞமல்ல. இந்த பதிவில் கப்பல் பயணத்தின் அனுமதி, பயணசீட்டு பெறல், கப்பலில் பயணித்து திருகோணமலையை சென்று சேரும்வரை பட்ட அவஸ்தைகளை பார்க்கலாம். கப்பல் என்றால் அது பயணிகள் கப்பல் அல்ல, சரக்குகளை ஏற்றி செல்லும் சரக்கு கப்பலில் எந்த அடிப்படை வசதியும் இன்றி பயணிக்க வேண்டும்.
அந்த கப்பல் கீழே உள்ள கப்பலின் தரத்தில் அல்லது அதை விட சிறிது நல்ல நிலையில் இருக்கும்.






**********


இப்போதும் யாழ் குடா நாட்டு மக்கள் வெளியே பயணிப்பதற்கான பாதைகளாக விமான பயணமும், கப்பல் பயணமுமே அமைந்திருக்கிறது. முன்னரை விட இப்போது பயண அனுமதியை பெறுவதற்கு இன்னும் சிரமப்பட வேண்டியிருப்பதாக அறிய முடிந்தது.


**************


யாழ் குடாநாடு இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த பின் திறந்த வெளிச்சிறைசாலையான யாழில் இருந்து மக்கள் வெளியே மக்கள் செல்வதற்கு நிறைய கட்டுப்படுகள் இருந்தன. யாரும் தமக்கு தேவையான நேரத்தில் யாழ் குடா நாட்டுக்கு வெளியே சென்றுவிட முடியாது. பயணத்துக்கான அனுமதியை பெறுவதற்கு குறைந்தது ஒரு மாதங்களாவது காத்திருக்க வேண்டும். அலுவலக, கல்வி நிமித்தம் செல்பவர்களுக்கு வேறு நடைமுறையும், சாதாரண பொதுமக்களுக்கு/ தனிப்பட்ட காரணமாக பயணிப்பவர்களுக்கு வேறு நடைமுறையும் இருந்தன.

சாதாரண பொதுமக்களாக/ தனிப்பட்ட தேவைகளுக்கு பயணிப்பவர்களாக இருந்தால்

இராணுவத்திடம் இருந்து பாதுக்கப்பு பயண அனுமதி பெறும் விண்ணப்பப்படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவம், 2 அல்லது 3 (சரியாக நினைவில் இல்லை) புகைப்படங்களுடன் கிராம அதிகாரியிடம் சான்று படுத்தவேண்டும், பின்னர் உதவி அரசாங்க அதிபர் (இந்தியாவில் சப்-கலக்டர்) அலுவலகத்தில் சான்றுபடுத்தி, குறிப்பிட்ட கிராமத்துக்கு பொறுப்பான இராணுவ முகாம் அதிகாரியிடம் உறுதிபடுத்தல் கையொப்பம் வாங்க வேண்டும். இவர்கள் அனைவரது உறுதிப்படுத்தலும் குறிப்பிட்ட நபர் பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர் என்ற சாரப்பட இருக்க வேண்டும். சிவில் அரச அலுவலர்களின் கையொப்பத்தை 2 நாட்களில் பெற்றுவிட முடியும். ஆனால் குறிப்பிட்ட கிராமத்துக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியின் கையொப்பம் பெற பல முறை அலைந்து கையொப்பத்தை பெற ஒரு வாரம் ஆகிலும் தேவைப்படும். அத்துடன் குறிப்பிட்ட நபர் நேரடியாக இராணுவ முகாமுக்கு செல்ல வேண்டியிருக்கும். இந்த மூன்று பேரிடமும் கையொப்பம் பெற்ற பின் அந்த பிராந்தியத்திற்கு பொறுப்பான இராணுவ முகாமில் விண்ணப்பத்தை கையளிக்க வேண்டும். அவர்கள் அதை உறுதிப்படுத்தி பலாலியில் உள்ள இராணுவ சிவில் (இராணுவம் அதில் என்ன பின் சிவில் என்று ஆச்சரிய படுகிறீர்களா? பொதுமக்களின் பயண ஒழுங்கு அனுமதியை வழங்கும் அலுவலகம் அப்படி தான் அழைக்கப்படும்) அலுவலக்கம் எல்லா தகவல்கள், ஆவணங்களையும் சரி பார்த்து நிராகரிக்கும் அல்லது அனுமதிக்கும். அந்த அனுமதி கிடைக்க குறைந்தது 2 வாரங்களாவது செல்லும். ஆனால் இரண்டு வாரத்தில் கிடைக்கும் என்று வீட்டில் இருந்தால் 2 மாதம் ஆனாலும் கிடைக்காது. இரண்டு வாரம் முடியும் தறுவாயில் குறிப்பிட்ட பிரதேசத்துக்கு பொறுப்பான இராணுவ முகாமுக்கு போனால் இன்று வா, நாளை வா என இழுத்தடித்து பயணத்துக்கான அனுமதி முன்று அல்லது நான் கு வார முடிவில் கையில் கிடைக்கும். கிடைத்த அனுமதி கூட 1 அல்லது 2 மாதம் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் கப்பலில் அல்லது விமானத்தில் இடம் கிடைக்காவிட்டால் மீண்டும் பாதுகாப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதுவே அலுவலக காரியமாக/ அல்லது கல்வி காரணங்களுக்காக செல்வோருக்கு பதுகாப்பு அனுமதி முறை வேறானது, சற்று இலகுவானது. எனது பயணம் கல்வி பயணமாக இருந்ததால் இந்த முறையிலேயே நானும் எனது பள்ளி தோழர்கள், மற்றும் எம்முடன் துணை வந்த ஆசிரியர்களும் அனுமதி பெற்றோம். அதைப்பற்றியும், கப்பல் பயண சீட்டு பெறுவது பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.





தொடரும்...............

Sunday, 26 August 2007

இரசித்தவையும் இரசிக்க முடியாது போனவையும்

90 கும் 95 க்கும் இடைப்பட்ட காலங்களில் ஈழத்தில் குறிப்பா யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சிகள் பற்றி அந்த நேரத்தில் இருந்தாக்களுக்கு ஞாபகம் இருக்குமெண்டு நினைக்கிறன். மின்சாரமற்ற, பொருளாதார தடைகளுடன், ஹெலி (உலங்கு வானூர்தி), விமான குண்டுவீச்சுக்கள், இருந்தால் போல் பலாலி முகாமில் இருந்து ஏவப்படும் தொலைதூர எறிகணைகள் இவற்றுக்குள்ளும் எங்கட கோயில்களிலை திருவிழாக்கள் இரவிரவா நடக்கும். பள்ளிகூட திறந்த வெளி அரங்குகளிலை நாடகங்கள், சாந்தன், இராஜா, தமிழீழ், இசை குழுக்களின் இசை நிகழ்ச்சிகள் என அடிக்கடி ஏதாவது இரவிரவா நடக்கும். என்ன இரவிலை ஜெனரேற்றர்/ லைற் என்ஜின் போன்றவற்றில் இருந்து எடுக்கிற மின்சாரத்தை கொண்டு தான் கோயிலில் மின் விளக்குகள் ஒளிரும். இரவிலை ஹெலி சத்தம், அல்லது விமான இரைச்சல் கேட்டல் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு கோயிலே இருட்டில் முழ்கும். ஆனாலும் அந்த திருவிழாக்கள் உணர்வு பூர்வமாகவும், எங்களை போல இருக்கிற பதின்ம வயது பொடியழுக்கு ரசிக்கத்தகவையாகவும் இருந்தன. அதிலும் கொடியேறி தீர்த்த திருவிழா முடிஞ்சு அடுத்த நாள் நடக்கும் பூங்கவன திருவிழா முழுக்க முழுக்க பொழுது போக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே கொண்டதா இருக்கும்.

பூங்கவனத்தண்டு சாமி ஒரு ஆறு அல்லது எழுமணியளவில் எழுந்தருளி வந்து வெளிலை அதுக்கென அமைக்கப்பட்ட பந்தல் ஒண்டிலை இருந்தாரெண்டால் அர்த்தன் நிகச்சி தொடங்க போகுதெண்டது தான்.

பூங்காவனத்திலை நடை பெறும் நிகழ்ச்சிகள் என பார்த்தால்

1. மேளச் சமா/ தவில் கச்சேரி

கோயில் வித்துவாங்கள்/ கத்துகுட்டிகள்
பஞ்சாபிகேசன் குழு,
நாகேந்திரன் குழு (பஞ்சாபிகேசனின் மகன்)
இன்னும் யாரும் பிரபலாமான ஒரு குழு

2. வில்லுப்பாட்டு

சின்னமணி குழுவினர் அல்லது
சிறிதேவி குழு?? ஒரு ஐயர் ஒராள் தான் பாடுவார் (பெயர் ஞாபகம் இல்லை)


3. இசை குழு

ஈழ நல்லூர் அருணா குழு
அல்லது வேறு யாராவது


என்னுடைய மாமா (அவர் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்) யாழ்ப்பாணத்திலை இருந்து பூங்காவனம் பாக்க மட்டும் தான் வருவார் அதிலை அவருக்கு பிடிச்சது மேளச்சமா தான். ஆனா நாங்கள் பூங்காவனம் போறது வில்லுபாட்டு பாக்கவும், இசை நிகச்சி பாக்கவும் தான். ஆறு ஏழு மணிக்கே போடுவம். மேளச்சமாவை ஒழுங்கா பாக்கிறமோ இல்லையோ ஒழுங்கா கச்சானும், ஐஸ்கிறீமும் சாப்பிட்டு கொள்ளுவம். அதைவிட ஊர் கதை, எந்த பொடியன் யாரை சுத்துறான் எண்ட கதையள் பொக்கும் சில பேர் படுத்து நித்திரையா போவாங்கள் வில்லு பாட்டு தொடங்க எழுப்ப சொல்லி போட்டு. எப்பிடியும் அருணா குழுவின் பாட்டு தொடங்க விடியப்புறம் 3அல்லது 4 மணியாகும். முடிய விடிஞ்சிடும். ஆனாலும் முழு இரவும் நித்திரை கொள்ளாம கண் கொட்ட கொட்ட முழிச்சு கொண்டு இருப்பம்.

அதே போல எங்கட பள்ளிகூட மைதானத்திலை நடக்கிற நாடக நிகழ்வு, இசை நிகழ்ச்சி என எல்லத்தையும் தப்ப விடாம போய் இரவிரவா இருந்து பாப்பம்.

இந்தியனாமி போன உடன தேனிசை செல்லப்பாவினுடடய இசை கச்சேரி எல்லா ஊரிலையும் நடந்தது. எங்கட ஊரிலையும் நகரசபை மைதானத்திலை நடந்த நிகழ்ச்சிக்கு நானும் போன்னான். கரை கொள்ளாத சனம்.
தேனிசை செல்லப்பாவின் கணீர் என்ற குரல், அந்த மேடை எல்லாமே இன்றும் நிழல் போல நினைவில்.

அடுத்து ஒரு நாடகம் எங்கட ஊர் கலைஞர்கள் கொண்டு அரங்கேறியது. அதிலை ஒரு பாட்டு வரும்

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்...


அதன் பிறகு நிறைய பாத்திருக்கிறன் எது எது என வரிசையா சொல்ல வராட்டிலும் ஞாபகத்தில் உள்ளதை சொல்லுறன்

முத்தமிழ் விழா எண்டு சொல்லி யாழ் குடா நாட்டின் முக்கியமான பிரிவுகளிலை 2 நாள் நிகவுகள் நடைபெற்றன. எங்கடை ஊரிலை நடந்த முதல் நாள் நிகழ்வுக்கு போய் இருந்தன். அதிலை காத்தவராயன் கூத்து , நாடகங்கள் என நிறைய நிகழ்ச்சிகள் நடந்திச்சு அதே நேரம் பலாலிலை இருந்து அடிச்ச எறிகணைகள் விழா நடந்த இடத்துக்கு கிட்ட விழுந்து வெடிச்சிச்சு. அதாலை இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு போகாமல் விட்டிட்டன். அதாலை ஒரு முக்கியமான சந்தர்ப்பம், யாருக்கும் இலகுவிலை கிடைக்காத வாய்ப்பு ஒண்டை தவற விட்டிட்டன்.

பிறகு எங்கட பள்ளி கூட திறந்த வெளியரங்கிலை
சந்தன காடு முக்கியமா ஞாபகம் இருக்கிற நாடகம் அத விட இன்னும் நிறைய நாடகங்களும் நடந்திச்சு அண்டு.
பிறகு சாந்தன் இசைகுழு?? , இராஜா இசை குழுவும் இணைஞ்சு போட்டிக்கு பாட்டு நிகழ்ச்சி ஒண்டு அதிலை சாந்தன் குழு ஒரு பாட்டு பாடினா அதுக்கு இணையா ஒரு பதில் பாட்ட இராஜா குழு பாடும்.

உதாரணமா பத்தமெண்டா இராஜா குழு வீட்டுக்கு வீடு வாசல் படி வேணும் எண்ட இளையராஜாவின் பாட்டை பாடிச்சினம் அதுக்கு போட்டியா சாந்தன் குழு ஒரு போட்டி பாட்டு பாடிச்சினம்.

அத விட தமிழீழ இசைகுழு என்ற போராளி கலைஞர்களின் இசை நிகழ்ச்சி எண்டு கனக்க நடந்திச்சு. ஒரு நிகச்சியை கூட தப்ப விட்டதில்லை. எப்பிடியும் ஒரு ஆறேழு பேரா சேர்ந்து தான் போவம். இரவு பசிக்கு வயிறு நிறைக்கிறது கச்சானும், ஐஸ்கிறீமும் தான்.



ஒரு நிகழ்ச்சிக்கு கூட போக பொறன் எண்டு கேக்க அப்பா அம்மா அனுமதி மறுத்ததில்லை அதே போல நிகழ்ச்சி முடிஞ்சு விடியப்பறம் 4 மணிக்கு கதவிலை தட்ட சினக்காம அப்பா/ அம்மா வந்து கேற்றை திறப்பினம்.

இராணுவ தாக்குதல் பயம், பொருளாதர தடைகள், எங்க போற எண்டாலும் சைக்கிள் தான். ஆனா அனைத்தையும் எம்மால் மனம் விட்டு இரசிக்க முடிந்தது.




காலம் 11/08-12/08/ 2007, இடம் மார்கம் பேயர் மைதானம், ஒன்ராரியோ, கனடா











எந்த வித உயிர் பயமும் அற்ற சூழல், இதமான மாலை நேரம். அங்கு ஹெலிக்கு உயிரை காக்க பனை மரத்தை சுற்றிய சம்பவங்களுக்கு பதிலா இஞ்சை ஹெலியிலேயே ஏறி ஒரு சவாரி போய் வர வசதியுடன் கூடிய ஒரு களியாட்ட நிகழ்வு இரண்டு நாட்கள் நடந்தது. இரண்டு நாட்களும் போய் இருந்தேன்.ஈழத்தை போல மைதானம் நிறைந்த சனக்கூட்டம்.






ஊரில் இருந்த காலத்தில் இலங்கை சர்வதேச வானோலியில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு எனும் நிகழ்ச்சியில் அறிமுகமான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி ஒன்று அந்த நிகழ்சியை செய்த அப்துல் ஹமித் இனாலேயே இங்குள்ள ஆக்களுக்காக நடாத்தப்பட்டது.







அதை விட தென்னிந்திய திரைப்பட பாடகர்கள் சிலருடன் சென்னை ரிதம்ஸ்??? குழுவின் இசை நிகச்சி,
நடன நிகச்சி... என பல. ஆனால் விளம்பரம் செய்த சன் ரிவி அசத்தபோவது யாரு குழுவினர் வந்து சேரவில்லை. வந்தவர்களில் பாதிப்பேர் அவர்களை பார்க்க வந்திருப்பார்கள் என நினைக்கிறன். இங்குள்ள இசை நிகழ்ச்சிகளின் ஒலியமைப்பு போல் ஈழத்தில் பார்த்த நிகழ்ச்சிகளில் ஒலியமைப்பு சீராக இருந்ததில்லை. அத்துடன் அங்கு சில நேரங்களில் அருணா குழு இசை நிகழ்ச்சியில் டிரம் வாத்திய ஒலி பாடலின் குரலையும் தாண்டி ஒலிக்கும்.




அத்துடன் பசி தீர்க்க விதம் விதமான ஈழத்து உணவு வகைகள் சுடச்சுட வாங்கி உண்ணும் வசதி.


கொத்துரொட்டி கடைகள்,






கரம் சுண்டல் கடைகள்
வள்ளி கிழங்கு அவியல்
















அப்பம், தோசை இட்டலி
வறுத்த கச்சான்,
இடியப்பம்
கூழ்


இவற்றுடன் மேலைதேய உணவுகளான

பீஸ்ஸா, சூடான நாய் :) (Hot dog)


ஐஸ் கிறீம் கடைகள் அதிலும் யாழ்ப்பாண சுவை மாறாத எனும் விளம்பரத்துடன்






என பல உணவுகள்.


இருந்த போதும் இவற்றில் ஒன்றில் கூட என்மனம் இலயிக்கவில்லை. என்னக்கு அங்கு ஒருமணி நேரத்துக்கு மேல் நிற்க பிடிக்கவில்லை. எப்படா விட்டுக்கு போவன் எண்ட மாதிரி இருந்திச்சு. ஊரிலை இரவிரவா நிகழ்ச்சி பார்த்த எனக்கு இரவு 11 மணி வரையும் இருந்து பொறுமை காக்க முடியாமல் இரண்டு நாளும் பாதியிலேயே வெளியேறிவிட்டேன்.

ஏன் என்னால் இரசிக்க முடியவில்லை? காரணம் என்ன என யோசித்து யோசித்து பாக்கிறன்?

ஏன்?....

Saturday, 25 August 2007

பள்ளிக்கூடம் போகலாம்- 1

பள்ளிகூடம் ஒவ்வோருவரது வாழ்கையிலும் மறக்கமுடியாத அத்தியாயங்களை கொடுக்கும் உன்னதமான இடம். பள்ளிகூடம் படம்; சினேகா, நரேன், சீமான், தங்கர்பச்சன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஒரு பள்ளிகூடத்தின் கதையை மட்டுமல்ல, நட்பின் நெருக்கம், பள்ளி காதல் என பலதை சொல்லி சென்றுள்ளது. படத்தை பற்றிய விமர்சனங்களை பலரும் செய்துவிட்ட நிலையில் பள்ளிகூடம் படம் பற்றி நான் எதையும் நான் சொல்லப்போவதில்லை. இங்கு சொல்ல போவது எனது பள்ளிகூட நண்பர்களில் சிலர் பற்றிய ஞாபக குறிப்புக்கள்/ அல்லது ஞாபகத்தில் இருப்பவர்களை பெயரிடாமல் பட்டியலிடல் மற்றும் பள்ளிகூட வாழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்கள் பற்றிய ஒரு மீள் பார்வை மட்டுமே.

ஏற்கனவே நான் எழுதிய சில
1.குண்டு போட்டவர்கள் மீது விழுந்த குண்டு.....
2.ஆசிரியர்கள், பட்டம் சூட்டல், இன்ன பிற...
3. உயிர் பயத்தோடு கழிந்த ஒரு பாடசாலை நாள்


அடிக்கடி பழைய நண்பர்களை ஞாபகப்படுத்தி பார்த்தாலும் பலரோடு தொடர்பறுந்த நிலையில் பலர் எங்கு எந்த நாடுகளில் இருக்கிறார்கள் எதுவுமே தெரியாத நிலையில் நினைவுகளில் மட்டுமே பலரது நட்பு நிலைத்திருக்கிறது. இருந்த போதும் உயர்தர கல்வி வரை கற்ற பலரது நட்பு இன்றும் ஓரளவுக்கு நீடித்திருக்கிறது. அப்படி தொடர்பில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் செர்ந்து எமது பாடசாலை நண்பர்களின் குழுமம் ஒன்றை யாஹு வில் அமைத்திருந்தோம். அந்த குழுமத்தின் மூலம் எமது நட்பை தொடர்ந்து பேண முடிந்தது மட்டுமல்ல மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகள் முன் சுடப்பட்டு இறந்து போன நண்பனின் குழந்தைகளுக்காக ஒரு சிறுதொகையை சேர்த்து பிள்ளைகளின் பெயரில் வங்கி கணக்கில் இடும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். உலகம் முழுவதும் சிதறிப்போய் இருந்தாலும், எம்முடன் படித்த தோழனின் இழப்பின் துயரத்தில் இருக்கும் இன்னும் 30 களை கூட எட்டாது இரண்டு குழந்தைகளுடன் தனித்து விடப்பட்ட அவனது குடும்பத்துக்கு சிறிதளவாவது உதவுவதில் எல்லாரும் ஒன்றுபட்டோம் என்பதில் ஓரளவு திருப்தியும் ஏற்படுகிறது.




இந்த திருப்தியுடன் நினைவில் இருக்கும் பழைய நண்பர்களை பற்றி இனி...




புதிது புதிதாக பலர் நட்பு வட்டத்துக்குள் இணைந்தாலும் பள்ளிகூடங்களில் சிறிய வயதுகளில் ஒரே வாங்கில் அல்லது ஒரே வரிசையில் இருந்த நண்பர்கள் அடிக்கடி நினைவில் வந்து போவர்கள். அதிலும் வாங்கு எனும் போது இருக்கையும், எழுதும் பகுதியும் பிணைக்கப்பட்ட ஒரு வாங்கில் குறைந்தது 3 பேர் இருக்க கூடிய வாங்குகளில் ஒவ்வோருவரும் தமது பகுதி என அளவு கோல்/ அடி மட்டத்தால் அளந்து எல்லை பிரிப்பதும், அவரவர் பகுதிகளில் இருக்கும் அழுக்கை வீட்டில் அப்பா/ அண்ணா என யாரும் சவரம் செய்து மொட்டையாய் போன பிளேட்டை கொண்டு விறாண்டி/ சுரண்டி சுத்தம் செய்வதும், எமது சுந்தர நாமங்களை அதில் பல வண்ணங்களில் பொறிப்பதும் நடக்கும். அந்த எல்லையை தாண்டி மற்றைய நண்பனின் கொப்பி, புத்தகங்கள், அல்லது கையோ வந்தால் கூட சில நேரத்தில் முரண்பாடு வரும். இருந்த போதும் ஒரே வாங்கு நண்பர்களுக்கிடையே ஏற்படும் நெருக்கம் மற்றையவர்களோடு ஒப்பிடும் போது அதிகம் தான்.
அந்த வகையில் அடிக்கடி என் நினைவில் வந்து போகும் ஏதோ ஒரு விதத்தில் மிக நெருக்கமக இருந்த நண்பர்கள் சிலர் பற்றிய ஞாபக குறிப்புக்கள் (எல்லாரையும் பற்றி எழுத ஒரு பதிவு போதாது).


பாலர் பிரிவின் ஒரே வாங்கார்


பாலர் பிரிவு, முதல், இரண்டாம் வகுப்பு வரை என்னுடன் ஒரே வாங்கில் இருந்த இரு நண்பர்களை பிரிந்து பாட்சாலை மாறி போக வேண்டிய சந்தர்பம் ஏற்பட்டது. இருந்த போதும் அந்த இருவரது பெயரையும் இன்றும் மறக்க முடிவதில்லை. நான் எமது ஊரிலேயே இருக்கும் பிரபலமான பாடசாலைக்கு மாறி சென்றுவிட, அவர்கள் ஆண்டு 6 இல் புலமை பரீட்சையில் சித்தியடைந்து யாழ் இந்துகல்லூரிக்கு சென்றுவிட்டார்கள். இருந்த போதும் அவர்கள் இருவரில் ஒரு நண்பன் நாம் படித்த தனியார் (ரியூசன்) கல்வி நிறுவனத்துக்கு ஆண்டு 9 இல் இருந்து மீண்டும் வந்ததான் அதன் பிற்பாடு அவனது நட்பை மீண்டும் பேண முடிந்தது. அவன் தொடர்ந்து உயர்தர வகுப்பில் கணித பிரிவுக்கு எனது பாடசாலைக்கே வந்து விட்ட பின் அவனும் நானுமாக பாட்சாலை லியோ கழக பணிகளை இணைந்து செய்திருந்தோம். மீண்டும் 95 இடப்பெயர்வில் அவன் யாழ்குடா நாட்டை விட்டு வெளியேறி எங்கெங்கோ போய் சிங்கபூருக்கு கல்வி கற்க சென்று இப்போது சிங்கபூரிலேயே பணியேற்றியும் வருகிறான். அடிக்கடி இல்லாவிட்டாலும் இடையிடையே எம் எஸ் என் தூதர் மூலமும், தொலை பேசி மூலமும் தொடர்பை பேணிவருகிறோம். மற்றைய நண்பன் இப்போது ஐக்கிய இராச்சியத்தில் இருக்கிறான் என அறிந்திருந்தாலும் இதுவரை அவனுடன் எந்த தொடர்பும் இல்லை.


புதிய பாடசாலையில் ஒரு வாங்கார்

பின்னர் புதிய பாடசாலையில் மிண்டும் ஒரே வங்கு நட்பு என நால்வர் வந்து சேர்ந்தனர் அவர்களது நட்பும் அதிக காலம் நீடிக்க வில்லை. ஒரு நண்பன் கொக்குவில் இந்து கல்லூரிக்கு மாறி போய்விட , பாடசாலையில் ஆண்டு 6 க்கு வரும் போது நடைபெற்ற பரீட்சையின் அடிப்படையில் வகுப்புக்கள் கெட்டிகாரர், நடுத்தரம், கடை நிலை என வகுப்புக்கள் பிரிக்கப்பட்ட போது என்னுடன் இருந்தவர்கள் பலரும் ஏ வகுப்புக்கு போய் விட நான் மட்டும் பி பிரிவில் சேர்க்கப்பட்டேன். பின்னர் மீண்டும் எனது ஆண்டு 6 புள்ளிகளை பார்த்து என்னை மீண்டும் ஏ பிரிவில் சேர்த்த போது பழையவர்கள் வேறு புது நட்பு வட்டத்துக்கு போய்விட நான் இருந்த வரிசையில் இருந்து புதியவர்கள் சிலர் நட்பு வட்டத்துக்குள் இணைந்து கொண்டனர். அந்த வட்டத்தில் இருந்தவர்கள் நட்புக்கூட நெடு நாள் நீடிக்க வில்லை. என்னுடன் இருந்த ஒரு நண்பன் 89 களின் இறுதியில்/ 90 இன் ஆரம்பத்தில் மீண்டும் இலங்கை அரசுடன் பொர் வெடிக்கலாம் என்ற சூழ் நிலையில் ஒருவன் இந்தியாவுக்கு சென்று விட மற்றைய நண்பனும் தனது தாயார் மட்டகளப்பில் பணி நிமித்தம் இருப்பதால் அவருடன் இணைய செல்வதாக சென்றுவிட மீண்டும் புதியவர்கள் ஒரே வாங்கில் வந்து சேர்ந்தாலும் அதன் பின் நமக்கும் ஒரளவு வயதும் வந்துவிட்டதால் ஒரே வாங்கு நட்பை விட ஒரே ரியூசன், ஒத்த குணம் உடையோர் என நட்பு வட்டம் வேறுபட தொடங்கி இருந்தது.

இந்தியாவுக்கு சென்ற நண்பன் அடிக்கடி நினைவில் வந்து போவான். எப்படி இருக்கிறான், என்ன ஆனான் என கடந்த வருடம் வரை அறிய முடியவில்லை. இருந்தால் போல் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, தனது பெயரை சொல்லி ஞாபகம் இருக்கிறதா என கேட்ட போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது தொலைபேசி இலக்கத்தை எமது பாடசாலை மாணவர் குழுமத்தில் பெற்று கொண்டதாகவும் கூறியிருந்தான். தான் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த செய்தியையும் கூறினான். உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

மட்டக்களப்புக்கு சென்ற நண்பன் மீண்டும் பல்கலைக்கழகத்தில் கற்று கொண்டிருந்த போது அவனும் மருத்துவதுறைக்கு தெரிவாகி எனது பல்கலைக்கழகத்துக்கே வந்திருந்தான். நான் இருக்கும் முகவரியை அறிந்து என்னை தேடி வந்து ஆச்சரியப்படுத்தினான். இப்போதைய யுத்த சூழல் அவனை மீண்டும் எங்கு கொண்டு போய் சேர்த்துள்ளதோ தெரியவில்லை.


பள்ளிகூடம் போவோம் இன்னும் வரும்.....

Saturday, 23 June 2007

வெயிலொடு உறவாடி






Saturday, 9 June 2007

பணச்சடங்கு அல்லது Wedding social

பணச்சடங்கு எனும் நிகழ்வை தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறீர்களா? அதை பற்றி பதிவின் பிற்பகுதியில் பார்போம். முன்னர் நான் இங்கு Wedding social என்பதை பற்றி சொல்கிறேன்.

Wedding social என்றால் திருமணமாக போகும் ஜோடி தமது திருமண செலவை திரட்டுவதற்காக ஒழுங்கு செய்யும் ஒரு சமூக நிகழ்வு என சொல்லலாம். இதை பற்றி எந்த ஒரு விசயமும் தெரியாமல் எனது துறையைச் சேர்ந்த நண்பனின் அழைப்பை ஏற்று எமது துறையில் கற்கும் இன்னொரு மாணவி ஒருவருடைய Wedding social ஒன்றிற்கு முதல் முதல் போய் இருந்தேன். அங்கு போகும் வரை இதன் தாற்பரியம் என்ன? ஏன் அவ்வாறு ஒழுங்கு செய்கிறார்கள்? எப்படி இருக்கும்? என்னவெல்லாம் நடக்கும் என் ஒன்றும் தெரியாமலே அந்த நிகழ்வுக்கு போய் இருந்தேன். அங்கு போனதன் மூலம் அறிந்தது இது தான்.



Wedding social நிகழ்வுக்காக ஏதாவது ஒரு கெளிக்கை விடுதி/ "Bar" ஒன்றில் ஒரு இரவு நேரத்தை பதிவு செய்து எடுபார்கள். பின் தமது நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்கள் ..... என பலருக்கும் 10 கனேடிய டொலர் ( நான் பார்த்தது, இந்த தொகை வேறுபட முடியும்) பெறுமதியுள்ள ஒரு நுளைவு அட்டையை விற்பார்கள். அந்த அட்டையை கொண்டு குறிப்பிட்ட கெளிக்கை விடுதிக்கு போனால் மேலைத்தேய இசை இசைக்கவிடப்பட்டிருக்கும். அவரவருக்கு வேண்டிய குடிவகைக்கு அவரவரே பணம் செலுத்த வேண்டும். அதே போல குலுக்கல்/ அதிஸ்ட சீட்டு முறையில் வழங்குவதற்கு சில பொருட்களும் இருக்கும். அந்த போட்டியில் நுளைவதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு மேலாக அங்கு வந்திருப்போரிடம் உண்டியலிலும் பணம் சேகரித்தார்கள்.

இதன் மூலம் அவர்களின் திருமணத்திற்கு போதுமான பணத்தேவையில் எந்தளவுக்கு பூர்த்தியாகும் என்பதை சொல்ல, அங்கு அந்த நிகழ்வு முடியும் வரை எவ்வளவு மக்கள் வந்து சென்றார்கள் என்பதை நின்று கணக்கெடுத்தால் தான் சொல்ல முடியும். ஆனால் அதற்கு பொறுமை இல்லாது போய் அரை மணி நேரத்திலேயே வெளியே கிளம்பிவிட்டேன்.

ஆனால் இந்த நிகழ்வு இங்கு அதாவது நான் இருக்கும் பிரதேசத்தில் ஒரு பொதுவான நிகழ்வு.

கனடாவின் ஏனைய இடங்களிலும் இப்படி நிகழ்வுகள் இங்குள்ள மக்களால் நடாத்த படுகிறதா?
ஏனைய நாடுகளில் எப்படி?


யாராவது சொல்லுங்கள்.



(குறிப்பு:இந்த நிகழ்வு இங்குள்ள தமிழ் சமூகத்தவரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வல்ல)


இதே போன்றே ஈழத்திலும் பணச்சடங்கு எனும் ஒரு நிகழ்வு நடப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன்.

யாழ்குடா நாட்டில் குறிப்பாக வடமராட்சி பகுதிகளிலேயே இப்படி நிகழ்வு நடப்பதாக சொல்வார்கள். நான் வாழ்ந்த பகுதிகளில் பணச்சடங்கு எனும் நிகழ்வு நடப்பதில்லை. ஈழத்தின் ஏனைய பகுதிகளில் நடப்பது பற்றி தெரிந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஈழத்தில் நடக்கும் பணச்சடங்கு (நான் அறிந்தவரையில்)

யாராவது குடும்பத்தினர் பண கஸ்டம், அல்லது தொழில் முயற்சிக்கு பணம் தேவைப்படும் போது இப்படியான பணச்சடங்கை நடத்துவார்கள். அதற்கென ஒரு நாளை குறித்து
தமது உறவினர், நண்பர்கள் போன்றவர்களை பணச்சடங்கு எனும் நிகழ்வுக்கு அழைப்பார்கள்.
அதற்கு செல்பவர்கள் தம்மால் இயன்ற பணத்தை அவர்களுக்கு அன்றைய தினம் வழங்குவார்கள். இதன் மூலம் அவர்களது பண கஸ்டம் தீரும், அல்லது தொழில் தொடங்க பணம் கிடைக்கும்.
புலம் பெயர் வாழ் ஈழ மக்களிடையே ஐரொப்பாவில் பணச்சடங்குகள் நடப்பதாக கேள்விபட்டிருக்கிறேன். கனடா ரோறாண்டோ வில் எப்படி?

Tuesday, 5 June 2007

மலிந்து போன இறப்புக்கள்........

யாரால் எதற்காக என கூட சொல்ல முடியாது நாளாந்தம் கொல்லப்படுவோர் பற்றிய செய்தித் தலைப்புகள் ஊடகங்களை நிரப்பும் மரணங்கள் மலிந்த இன்றைய பொழுதில் எமக்கு தெரிந்தவர்கள் யாருக்கும் ஏதும் ஏற்பட்டுவிடகூடதே, என எண்ணியபடி நமக்கு தெரிந்த யாரும் அகப்படவில்லை என்பதை உறுதி படுத்திகொள்ளும் பொருட்டு மட்டுமே செய்தியை வாசிக்கும் மனநிலையை எப்படி சொல்லுவது? ஆனால் அப்படி ஒரு மனநிலைக்கு கடந்த ஒரு வருடத்துக்குமேலாக ஈழத்தில் நிலவும் சூழல் மனதை மற்றிபோட வைத்திருக்கிறது.

இருந்த போதும் தொலைபேசும் போதும், செய்திகளை வாசிக்கும் போதும், நண்பனின் தம்பியோ, அண்ணனோ சுடப்பட்ட செய்திகள், நாளாந்தம் காலை தினசரி வாங்கும் கடை நண்பன் தெருவில் சுடப்பட்ட செய்தி எல்லாம் மிக பழசாகி போக மீண்டும் மீண்டும் .... தொடரும் படுகொலை, காணாமல் போதலில் தெரிந்த யாரேனும் ஒருவர்

திருமலையில் கொல்லப்பட்ட 17 பட்டினிக்கெதிரான நிறுவன பணியாளரில் ஒருவனாக எமது கல்லூரி நண்பன் ஒருவனும் கொல்லப்பட்ட செய்தி, கல்லூரி காலத்தில் காதலித்து, திருமணமாகி 4 வருடங்கள் கூட கடக்காத நிலையில் அவனது குடும்பத்தில் அது எத்தகைய இழ்ப்பு ......

மீண்டும் நேற்றைய தினம்

பள்ளி தோழன்,தபாலதிபர், திருமணமாகி 4 வருடம் கூட கடக்காத நிலையில் 2 குழந்தைகளின் தந்தை மனைவி குழந்தைகளின் முன்னே சுடப்பட்டு இறந்தான் என்பதும், அவனது உடல் 18 மணி நேரமாக சுடப்பட்ட இடத்திலேயே இருந்தது என்பதையும் வாசித்த போது ஏற்பட்ட கவலை, மன உழைச்சல்....

இப்படி நடக்கும் சம்பவங்களை வாசித்து ஏதுவுமே செய்யமுடியாது இருக்கும் நிலையை எண்ணி நொந்து கொள்வதை தவிர வேறெதுவும் இல்லை.

தொலைபேசும் போது உறவுகள், "இப்ப கொஞ்சம் கொஞ்சம் எல்லா பொருட்களும் கிடைக்கிறன, இடைஇடையே செக்கிங் (சுத்திவளைப்பு), நாளாந்தம் ஆமியின் வாகன தொடரணி போகும் போது தொலைபேசி இணைப்பு துண்டிப்பு, வீதி போக்குவரத்து 1 அல்லது இருமணி நேரம் முடக்கம் அப்பப்போ நடக்கும் சூடுகள் தவிர பறுவாயில்லாமல் இருக்கிறோம்" எனும் கூற்றை எப்படி எடுப்பது.......


நேற்றைய தினம் மட்டும் படுகொலை செய்யப்பட்டதாக வந்த செய்திகள்
1. Red Cross condemns murder of staff
2. 3 civilians killed in Jaffna
3. Postmaster shot dead in Chaavakachcheari

Thursday, 3 May 2007

ஆசிரியர்கள், பட்டம் சூட்டல், இன்ன பிற...

ஆசிரியர்கள், பட்டம் சூட்டல், அவர்கள் என்மீது செலுத்திய செல்வாக்கு



"எழுத்தறிவித்தவன் இறைவன் " இப்படி சொல்லுவார்கள். ஆனால் பள்ளி பருவத்தில் அப்படி தோன்றுவதில்லை.எல்லா ஆசிரியர்களாலும் மாணவர்களின் விருப்பத்திற்குரிய ஆசிரியராக முடிவதில்லை. ஒரு சில ஆசிரியர்கள் கடமைக்கு வந்துவிட்டோம் என கற்பித்தாலும் அவர்களை வைத்து ஆசிரிய பணியை குறைத்து மதிப்பிட முடியாது.
எமது பள்ளிகூடத்தை பொறுத்தவரை ஆண்டு 6 (தரம் 5) இல் ஒரு வகுப்பசிரியரும், கணிதம், விஞ்ஞானம் (அறிவியல்), தமிழ், சமயம் ... என 8 (இப்போது 10) பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் ஆண்டு 11 (தரம் 10/ க. பொ.த சா/த) வரையும் அவர்கள் தான் எமக்கு ஆசிரியர்கள். சொல்ல போனால் பெற்றாருக்கு அடுத்து எம்முடன் நீண்டகாலம் தொடர்ந்து எம் வளர்ச்சியை கண்டு வருபவர்கள் அவர்களாக தான் இருப்பர். (இது எமது பாடசாலையில் இருந்த முறை. வேறு பாடசாலைகளிலும் அவ்வாறா இருந்தது என்பதை மற்றவர்கள் கூறினால் தான் தெரியும்.)

கற்பிக்க வருபவர்களுக்கு பட்டம் சூட்டுவதும், பட்டப்பெயர் கொண்டே அந்த ஆசிரியர்கள் இல்லாத நேரம் அவர்களை மாணவர்கள் அழைப்பது வழக்கம்.

சுகாதாரம் கற்பிக்க வந்த ஆசிரியர் அல்லூட்ட குறைபாடுகள் பாடத்தை தாண்டி அடுத்த பாடத்துக்கு போகாத அவரது அல்லூட்டத்தால் அவரை அல்லூட்டம் என அழைத்ததும்

கணிதம் கற்பித்த ஆசிரியை குதிரை வேகத்தில் கணிதம் கற்பித்தல் குதிரை என பட்டம் வைத்து அழைத்ததும், பாலர் பிரிவில் கற்று கொண்டிருந்த அவரது மகன் வரும் போதெல்லாம் அவனையும் குதிரை என்றே அழைத்து அவனை வெறுப்பேற்றியதும்

ஒரு கதை.


ஆங்கிலம் கற்பித்த ஆசிரியருக்கு வைத்த பெயர் சவாரி: ஆங்கிலம் என்பதே வேம்பாக கசக்கும் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு, ஆங்கிலம் அவர்களுக்கு இரண்டாம் மொழி என்பதை உணராது அவரது கற்பித்தல் இருந்தது. சொல்ல போனால் எமக்கு ஆங்கிலம் மீதிருந்த ஆர்வமின்மையை மேலும் அதிகரிக்க வைத்த பெருமை அப்பெருமகனாரையே சாரும்.


கோயிலில் நெல்லிகாய் பிடுங்க போய், அந்த கோயிலின் நிர்வாகியாக இருந்த ஆசிரியர் திரத்த தறிகெட்டு ஓடிய என் நண்பர்கள் அவருக்கு வைத்த பெயர் நெல்லிகாய்.

10 ஆம் ஆண்டில் புதிதாக சமூக கல்வி கற்பிக்க வந்த வழுக்கை தலை வாத்தியாரின் கற்பித்தல் பிடிக்காமல், வந்த முதல் நாளில் உலகத்தில் இருக்கும் மலைகள் பற்றிய பாடத்தில் அவர் சொன்ன காப்பந்தெரியன் மலை தொடருக்கும் அவரது மொட்டைதலையில் ஓடிய குருதி குழாய் முனைப்புக்கும்/ மண்டை ஓட்டு தவாளிப்பு அடையளத்துக்கும் தொடர்பு படுத்தி (இதை தான் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறதெண்டு சொல்லுவார்கள் :) அவருக்கு காபன்தேரியன் என பெயரும் சூட்டினோம். அந்த ஆசிரியர் எமக்கு வேண்டாம் என பாடசாலை நிர்வாகத்திடமும், வகுப்பாசிரியரிடமும் சொல்லி அவரை பாடத்தில் இருந்து தூக்கி, முன்னர் இருந்த ஆசிரியரை சமூக கல்வி பாடத்துக்கு மாற்றுவித்தோம். மற்றிய பின்னும் அந்த மாற்றத்தை ஏற்காது தொடர்ந்தும் வகுப்புக்கு வந்து எமக்கு தொந்தரவு தந்தார். அவரை மற்றிய பின் புதிய நேர அட்டவணையில் சமூக கல்வி இருந்த நேரம் வேறு பாடம் வந்து விட்டாலும் பழைய நேர அட்டவணையே தன்னிடம் உள்ளதெனவும், புதிய நேர அட்டவணை தனக்கு கிடைக்கவில்லை எனவும் சொல்லி புதிய நேர அட்டவணைப்படி கற்பிக்க வந்த ஆசிரியர் கற்பிப்பதை அனுமதிக்க மறுத்துவிட்டார். இதை அறிந்த துணையதிபர் அவரிடம் வந்து புதிய நேர அட்டவணையை கருத்தில் எடுக்க கூறிய போது தனக்கு புதிய நேர சூசி கிடைக்க வில்லை என விதண்டாவாதம் செய்தார். துணையதிபர் போன பின் (இச்சம்பவம் நடந்தது மாசி மாதம்) இப்ப மாசி மாதம் தானே அதால அவருக்கு பனி பிடிச்சிட்டு எண்டு ஒரு சொல்லு சொல்லிவைத்தார். நூணலும் தன் வாயால் கெடும் என்பார்கள். அவர் சொன்ன வாக்கியதை, தொடர்ந்து வகுப்புக்கு அவரை வராது செய்யும் ஆயுதம் ஆக்கி கொண்டது எமது வகுப்பு. அவர் சொன்னது, சொல்லாதது எல்லம் வைத்து, நேர அட்டவணை படி பாடம் கற்பிக்க விடாமல் எமது கல்வியை குழப்புகிறார் என ஒரு கடிதம் எமது வகுப்பு மாணவர்களது கையொப்பத்துடன் பாடசாலை அதிபருக்கு போனது. அடுத்த வாரம் ஆசிரியர் பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இடம் மாறறம் செய்யப்பட்டதில் எமது வகுப்பினருக்கு ஒரே புழுகம்.

எமது வகுப்பு மாணவர்களால் சூட்டப்பட்ட பட்ட பெயர்கள் தன் மேலே சொன்னவை. ஆனால் சில ஆசிரியர்களது பட்ட பெயர்கள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவதும் நடக்கும்.

நாம் கற்பதற்கு 20 வருடத்துக்கும் முன் இருந்தே பௌதீகவியல் கற்பிக்கும் ஆசிரியை ஐ காகம் என அழைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. அதே போல துணையதிபரை "பாம்" என அழைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.


எவ்வளவு தான் ஆசிரியர்களை நக்கல்/ பட்ட பெயர் சூட்டி அழைத்தாலும் அவர்கள் ஒவ்வொரு மாணவரின் வளர்ச்சியிலும், அவர்கள் அடையும் அடைவுகளுக்கு முக்கிய காரண கர்த்தாக்கள்.

ஆனால் நாம் பாடசாலையில் கற்ற போது எந்த ஒரு ஆசிரியரும் நானறிந்த வரையில் மாணவர்களை ஆசிரிய தொழிலுக்கு வாருங்கள் என கூறியது கிடையாது. பொடியளே ஒழுங்கா படிச்சு, கம்பசுக்கு போய் ஏதும் ஒழுங்கான வேலைக்கு போக பாருங்கோ இந்த வாத்தி வேலைக்கு மட்டும் வந்திடாதங்கோ என சொல்லிய ஆசிரியர்களே அதிகம்.


ஆரம்பத்தில் உயர் தர பாடத்தெரிவின் போது நான் வர்த்தக துறையை தெரிவு செய்வதா, அல்லது உயிரியல் துறையை தெரிவதா என குழம்பி வர்த்தக துறை எனும் முடிவுக்கு வந்திருந்தேன். வர்ததக துறை வகுப்புகளுக்கும் போக தொடங்கிவிட்டேன். ஆனால் எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் பலருக்கும் அது ஏற்புடையதாக இருக்கவில்லை. அதே பாடசாலையில் கற்பித்த எனது அப்பாவிடம் எல்லாருமாக செர்ந்து என்னை உயிரியல் துறைக்கு மாற்றி விடுமாறு கொடுத்த ஆலோசனை/ நச்சரிப்பு தாங்காமல் அது வரை எனது சுதந்திரம் என விட்டிருந்த அப்பாவும் எல்லா ஆசிரியர்களும் சொல்லுகிறார்கள், நீங்கள் (அப்பா நீங்கள் என தான் சுட்டுவது வழக்கம்) உயிரியல் கற்க கூடிய மாணவன், வீணாக வர்த்தகம் கற்க வேண்டாம் என சொல்லுகிறார்கள் எனவே உயிரியலை மாறி படியுங்கள் உங்களால் அப்பாடத்தை சிறப்பாக கற்க முடியாவிட்டால் இரண்டாம் தடவை வர்த்தகத்தை படியுங்கள் என சொன்னார். ஆனால் கட்டாயமல்ல யோசித்து முடிவெடுங்கள் எனவும் சொன்னார். சரி என்னதான் நடக்கிறது பார்ப்போம் என உயிரியலை கற்க முடிவெடுத்து அதையே படித்தேன்.


எல்லா ஆசிரியர்களும் வர்த்தக துறையை தெரிவு செய்ய வேண்டாம் (எமக்கு 9, 10, 11 ஆம் ஆண்டுகளில் வர்த்தகம் கற்பித்த ஆசிரியர் உட்பட) என கூறியதன் காரணம் வர்த்தம் கற்றால் ஈழத்தை பொறுத்தவரை பொதுவாக செய்ய கூடிய வேலை ஆசிரியர் வேலை மட்டும். ஆசிரியர் பணிக்கு தமது மாணவர்கள் வருவதை விரும்பாத ஆசிரியர்கள் அதை விட வேறு எதை சொல்லுவார்கள்.

இரண்டு வருட காலம் தற்காலிகமாக ஆசிரியராக கற்பித்த அனுபவத்தில் இருந்து எனக்கு ஆசிரியர் பணி மீது ஏற்பட்ட ஈர்ப்பு, அதில் கிடைத்த ஆத்ம திருப்தி எனது தற்பொதைய கற்றலை முடித்த பின் தேடி பெற போகிற வேலையில் கிடைக்குமா தெரியவில்லை.

உயிர் பயத்தோடு கழிந்த ஒரு பாடசாலை நாள்

நினைவு மீட்டல் அல்லது நனவிடைதோய்தல் என்பது தவிர்க்க முடியாதது. அதிலும் சில நினைவுகள் மறக்க முயன்றாலும் அடிக்கடி ஞாபகம் வந்து கொண்டே இருக்கும். சில மகிழ்வானவை ஆனால் வருத்ததை, ஒரு வித அச்சத்தை, எமது உயிருயிருக்கு எந்த நிமிடத்திலும் அச்சுறுத்தல் வரலாம் என எண்ண வைத்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் வந்து ஞாபமூட்டி கொண்டே இருக்கும்.

இந்த சம்பவமும் அப்படியானது தான். 1987-1990 க்கு இடைப்பட்ட இந்திய இராணுவ காலம். இந்திய விமானங்கள் ஒபரேசன் பூமாலை எனும் நடவடிக்கையில் விமான மூலம் உணவு பொதி போட்டதும், இந்திய இராணுவம் அமைதி காக்க ????? வந்து இறங்கிய உடனடியான பொழுதுகளில் ஒவ்வொரு கிராம பிரசைகள் குழுவும் அப்பகுதிக்கு பொறுப்பாக வந்த இராணுவ அதிகாரிக்கு நிறைகுடம் வைத்து மாலையிட்டு வரவேற்ற நிகழ்வும் நடைபெற்றதாக ஞாபகம். பின்னர் எல்லாமே பொய்த்து போய் மோதல் ஆரம்பித்த பின் ஆங்காங்கே ரோந்து என வரும் இராணுவத்துக்கும் கரந்தடி பாணியில் இருந்த புலிகளுக்கும் இடையில் மோதல் நடப்பதும் வழக்கம். மோதல் முடிவில் புலிகள் தப்பி போய் இருப்பார்கள் ஆனால் அப்பகுதியால் போய் வரும் இளைஞர்கள் அடி வாங்குவது சாதாரணமானது.

இப்படியாக ஒரு நாள் எமது பாடசாலையை அண்மித்த பகுதியில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் மோதல் வெடித்திருந்தது. சாதகமற்ற சந்தர்ப்பங்களில் புலிகள் அப்பகுதியை விட்டு விலகி செல்வது சாதாரணமான நிகழ்வு. அன்றும் அவர்கள் விலகி சென்று விட்டார்கள். ஆனால் அவர்கள் விலகி சென்ற பின்னும் இராணுவம் வேட்டுக்கள் தீர்ப்பதையோ இலகு ரக மோட்டார்கள் மூலம் தாக்குவதையோ 2-3 மணி நேரங்களுக்கு நிறுத்த வில்லை. மோதல் ஆரம்பித்தது எமது பாடசாலை அருகாமை ஆகையால் துப்பாக்கி சன்னங்கள் எமது வகுப்பு கூரைகளிலும், மோட்டார்கள் எமது பாடசாலை மைதானத்தினுள்ளும் சரமாரியாக விழ தொடங்கி இருந்தன. எமது பாடசாலை அமைப்பு மையத்தில் விளையாட்டு மைதானமும், அதை சூழ கட்டிடக்களுமாக இருந்தது.
அப்போது கணித பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியை எதுவும் செய்ய முடியாத நிலையில் எல்லா மாணவர்களையும் மேசை/ வாங்கின் கீழ் படுக்க சொல்லி விட்டு தானும் நிலத்தில் விழுந்து படுத்து கொண்டார். ஓட்டு கூரை வகுப்புக்களில் இருப்பது பாதுகாப்பற்றது அத்துடன் எமது வகுப்புக்களுக்கு முழுமையாக மூடி சுவர்கள் இல்லை; அரை சுவர் கொண்ட வகுப்பறைகள். அப்போது பாதுகாப்பு தேட வேறு எந்த மார்கமும் இல்லை. கிட்ட தட்ட அரை மணிநேரம் படிக்கும் மேசை/ வாங்குகள் தான் எமக்கு கவசங்கள்.

அப்போது மோட்டார் வீச்சு/ துப்பாக்கி குண்டில் இருந்து ஓரளவு பாதுகாப்பானது என கருதுவது நாலு பக்கங்களும் மூடி கட்டப்பட்ட மாடி கட்டிடங்களின் தரை தளங்கள்.
இடையிடையே மோட்டார் வீச்சில் ஓய்வு கிடைக்கும் இடைவெளிக்களை அவதானத்தின் மூலம் தெரிந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவர்களை அப்படியான மாடி கட்டடங்களுக்கு அழைத்து சென்று பாதுகாப்பு தேடுவதில் ஈடுபட்டனர். அவ்வாறு தனது வகுப்பு மாணவர்களின் நிலையறிய சென்ற அதே பாடசாலையில் கற்பித்த எனது தந்தை காலில் சிறு காயத்துகுள்ளகி இருந்தார். காயம் பட்ட உடனடியாக அவரால் உணர முடியவில்லை, தன் வகுப்பு மாணவர்களை பாதுகாப்பான மாடி கட்டிடத்துக்கு அழைத்து செல்லும் போது செருப்பில் நீர் போல ஏதோ தேங்கிய உணர்வை கொடுத்த போது தான் அவரால் அவரது காலில் காயம் பட்டதையே உணர முடிந்திருக்கிறது. ஆனால் அந்த காயம் பெரிதாக ஏற்படாதது ஒரு வகையில் மகிழ்ச்சி தான்.

இராணுவம் பாடசாலையுள் நுளைந்து சுடுவார்களோ என்றும் அப்போது எமக்கு பயமாக இருந்தது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் பாடசாலைக்கு வெளியில் நின்று 2- 3 மணி நேரமாக தீர்த்த துப்பாக்கி வேட்டுக்களும், மோட்டார்களும் எமது பாடசாலையையே அதிர வைத்தன. 10- 11 வயதே ஆன எங்களுக்கு அருகிலான துப்பாக்கி வேட்டுக்களும், மைதானதில் விழுந்து வெடித்து புகை கிழப்பிய மோட்டார்களும் எவ்வாறான அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அன்று இராணுவம் பாவித்த மோட்டார்கள் இறப்பர் மோட்டார்கள் தான் என்றும் அவை பாரிய சத்ததை தான் தரும், அதிக சேதம் தராது என்பதையும் பின்னர் சொல்லி கேள்விப்பட்டோம்.

Wednesday, 2 May 2007

ஆக்காண்டி ஆக்காண்டி......

"ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்" இப்படி தொடங்கும் ஒரு பாடலின் சில வரிகள் மட்டும் முதல் முதலாக எமது "பள்ளிகூடத்தில்" நடித்த நாடகத்தில் பயன் படுத்தும் போது தற்செயலாக தெரிய வந்தது. அப்போதும் முழுமையான பாடலை கேட்கவோ அல்லது அதன் வரிகளை அறியும் ஆர்வமோ அதிகம் இருக்கவில்லை. அப்போதைய நாட்டு நடப்புடன் சம்பந்தப்பட்டதாக அதாவது அப்போது நடந்த பண்டாரவளை பிந்துனுவேவா சிறை கைதிகளின் படுகொலையை சுட்டுவதாக அமைந்த குறியீட்டு நாடகத்தில் திரை விலகும் போது இந்த பாடலை பயன்படுத்தியிருந்தோம்.


















அதன் பிற்பாடு ஒரு சந்தர்பத்தில் இப்பாடலின் முதல் வரிகள் ஞாபகம் வந்து நான் உச்சரித்த போது என்னுடன் இருந்த நண்பன் அப்பாடலின் மேலும் சில வரிகளை பாடி காட்டினான்
அந்த வரிகளில்


" நான் அழுத கண்ணீரும் என் குஞ்சழுத கண்ணீரும் வாய்க்கால் வழியோடி வழிபோக்கர் கால் நனைக்க"
எனும் வசனமும் சேர்ந்து வந்தது.

அண்மையில் புலரும் வேளை இறுவட்டில் இப்பாடலை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது அதில் நான் மேலே சொன்ன வரிகளை காணவில்லை.







http://www.esnips.com/displayimage.php?pid=33979630

பாடியவர்கள்: ஞான ஆனந்தன் (சங்கீத் வர்மன், பிரகீத் வர்மன், டிலீப்குமார்)



சரி கூகுல் தேடலில் தட்டுபடுகிறதா என தேடிய போது

இப்பாடலை இயற்றியவர் சண்முகம் சிவலிங்கம் எனும் ஈழத்து கவிஞர் என்றும் அவர் மட்டகளப்பை சேர்ந்தவர் எனும் தகவலோடு



சசி??


சந்திரவதனா

இரா முருகன்

ஆகியோருடைய பதிவுகளில் பாடலில் வரிவடிவத்தை பெற முடிந்தது. ஆனால் அந்த மூன்று வரிவடிவத்திலும் நான் கேட்ட வசனம் இல்லை.

சண்முகம் சிவலிங்கம் அவர்கள் எந்த வருடத்தில், எச்சூழ்நிலையில் இப்பாடலை இயற்றினார் என தெரியவில்லை. ஆனால் ஈழத்தின் போர்க்கால வாழ்நிலையை இப்பாடலுன் பொருத்தி பார்க்க முடியும்
.




அப்பால் தமிழில் ஒரு கட்டுரையில் இப்பாடல் மட்டகளப்பில் வழங்கும் நாட்டார் பாடல் என்றும் அதை அடியொற்றியே சண்முகம் சிவலிங்கம் அவர்கள் இக்கவிதையை எழுதியதாகவும் ஒரு குறிப்பு கிடைத்தது.

சரி என இணையத்தில் சந்தித்த நண்பர்களிடம் விசாரித்த போது, ஒரு நண்பர் தமிழக கவிஞார் அறிவுமதி எழுதி, சின்னபொண்ணு என்பவர் பாடியதாக அன்னை தமிழ் இறுவட்டில் இடம்பெற்ற ஆக்காண்டி என தொடங்கும் வேறொரு வடிவத்தை எனக்கு தந்திருந்தார். அப்பாடலை கீழே இணைத்துள்ளேன்.




http://www.esnips.com/displayimage.php?pid=33979630





இவை இரண்டையும் விட தமிழ்.நெட் இணையத்தின் முன்றாவது ஒரு வடிவமும் கிடைத்தது. அதன் வரிவடிவை கீழே இணைத்துள்ளேன்.


ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைச்சாய்?

ஆறு போன இடமெல்லாம்
புற் படுக்கை முட்டை வைச்சேன்.

முட்டையெல்லாம் குஞ்சானா,
முழு வுலகும் குருவிச்சத்தம்.

குருவிச்சத்தம் கேக்கத்தானே
குழி பறிச்சு முட்டை வைச்சேன்.
சத்தம் மட்டும் போட்டு விட்டா,
உன் பிறப்பு முற்றா குமா?

சத்தம் போடத் தெரியா விட்டால்
பின்னே என்ன கருங் குருகு?

கூட்டை வேடன் கலைக்குறானா?
குருவி பிடிச்சுத் தின்னுறானா?

ஐயோ ஐயோ என்ன செய்வேன்!!
ஆகாதய்யா இவ் வேடர் கூட்டம்!!
வாயைக் கொஞ்சம் பொத்திக்கொண்டு
பாழ் வயிற்றைக் குருவி பார்க்கலாமே?

ஓஹோ! நீரும் (கொல்) வேடர்தாமோ?
எம் அலறல் கேட்டும் தின்போர்தாமோ?

ஐயோ குருவி! (முழுப்)பொய்யோ சொல்வாய்?
வையம் காணும் கவிமெய்யை அறிவாய்.

இல்லை இல்லை! கொல் வேடர் நீரே.
என் குஞ்சு இரண்டு கொன்றோன் நீயே.

கொஞ்ச வந்தேன்; கொல்வோன் என்றாய்
(கொல்)நஞ்சும் (நல்)நெஞ்சும் கிஞ்சித்து மறியாய்.

நீயே வேடன்! நின் நினைவோ கொல்லல்.
நாயே போடா! குறுநரி நினைவோனே!

ஓஹோ அறிவேன் உன் குலத்தழிவு
ஓரோர் நினைவும் உலகொவ்வா நிலையுலவு.

போ போ மூடா! உயிர்கொல் வேடா!
குருகும் புள்ளுமே உலகினி லுயர்வு
புவியே சுழல்வது புட்கட்குத் தாமே!
துயர்பட்டாலும் குருகே உயர்ந்தோன்.

முறையோ குருவி முறைதலை மறத்தல்
குருகும் அருகும் அர்த்தமில் கருத்தில்
பெருகிட வேண்டில் (வாழ்) வழிதனிற் கூர்க்க.
வரும் வளமும் பலமும் குருவிகள் வசமே.
கவி உட்பொருள்தனை உணர்க;
வெறும் கறைப்புலம்பலை ஒழிக்க.
வருவேன்குருவி, வணக்கமும் வாழ்த்தும்.

ஆனால் இப்போதும் விடை கிடைக்காத கேள்வி என்னிடம் இருப்பது நான் கேட்ட வரிவடிவத்துடனு இப்படியான பாடல் ஒன்று உண்டா என்பதே?

Tuesday, 1 May 2007

குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன

தமிழ் மாணவர்கள் எவ்வளவோ சிரமத்தின் மத்தியிலும் சிறப்பாகவே தமது திறமைகளை வெளிக்காட்டி வருகிறனர். அதை பற்றி எனது கடந்த பதிவில் பதிவு செய்திருந்தேன். அதிலே சொல்லப்பட்ட ஜாம் போத்தல் விளக்கு பற்றியும் மற்றும் சில விடயங்கள பற்றியும் சினேகிதி, நந்தியா ஆகியோருடன் நானும் இணைந்து ஒரு உரையாடலை செய்ய முயற்சித்தோம் :). அவசர அவசரமாக செய்யப்பட்ட உரையாடல் ஆகையால் ஒரு சீராக இருக்காது. அத்துடன் எமது உரையாடலில் ஆங்கில வார்த்தைகளும் கலந்தே வருகிறன. அதை பொறுத்து கொள்வீர்கள் என நினைக்கிறோம்.















உரையாடலின் இடையில் வரும் பாடல் விடியலை தேடும் பறவைகள் இறு வட்டில் உள்ளது. யாழ் பல்கலைகழக மாணவர்களால் உருவாக்கப்பட்டு, இசையமைக்கப்பட்டது. அந்த பாடலை தனியாகவும் கீழே இணைத்துள்ளேன்.



Track 9.mp3

Monday, 30 April 2007

போருள்ளும் எதிர் நீச்சலிட்டு வெல்லும் மாணவர்கள்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர (கா.பொ. தா சா/த) முடிவுகள் அண்மையில் வெளியாகி இருந்தன. இந்த பரீட்சை முடிவுகளை கொண்டே மாணவர்கள் தமது உயர் தரத்திற்கு அனுமதி பெறவும் தமக்கு விரும்பிய துறைகளை தெரிவு செய்யவும் முடியும். கடந்த வருடம் முதலே தமிழர் தாயக பிரதேசத்தில் இயல்பு நிலை கேட்டு போய் இருந்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். இடம்பெயர்ந்த சிங்கள மாணவர்கள் சிறப்பு பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுத, வாகரையில் இடம்பெயர்ந்த தமிழ் மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்க படாத சம்பவமும் நடந்து முடிந்தது.
பரீட்சை நடந்த தமிழ் பிரதேச முடிவுகள் எப்படி இருந்தன என்பதை சரியாக அறிய முடியவில்லை. யாழ்குடா நாட்டை சேர்ந்த ஒரு சில பிரபல பாடசாலைகளின் முடிவுகள் உதயன் பத்திரிகையில் வெளியாகி இருந்தன.

அப்படி உதயனில் வெளியான 5 பிரபல பாடசாலைகளில் மட்டும்

33 மாணவர்கள் 10 பாடங்களிலும் A தரத்திலும்
39 மாணவர்கள் 9 பாடங்களில் A தரத்திலும்
சித்தி பெற்றிருந்தார்கள் என்ற தகவலை பெற முடிந்தது.
இதில் வேம்படி மகளிர் கல்லூரியில் 100% ஆனா மாணவிகள் சித்தி பெற்று கா.பொ.தா உ/த கற்க போவதாகவும், செய்தி வந்திருந்தது.

அதை விட அதிகம் பிரச்சனைகளையும், மாணவர் கைதுகளையும் சந்தித்த ஹாட்லி கல்லூரி மாணவர்கள் (மாணவர்கள் கைது செய்யப்பட்டதும், அது தொடர்பாக தொடர்ச்சியான பல போராட்டங்கள் நடைபெற்றதும் பலரும் இணைய செய்திகள் மூலம் அறிந்திருக்கலாம்.)
6 மாணவர்கள் 10 பாடங்களிலும்
8 மாணவர்கள் 9 பாடன்ங்களிலும் A சித்தி பெற்றதாக உதயனில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்த வருட பெறுபேற்று மட்டங்கள் கடந்த காலத்தில் பெறப்பட்ட பெறு பேறுகளில் இருந்து வீழ்ச்சி அடைந்ததாக கூட இருக்கலாம்.

ஆனால் அவர்கள் நாளாந்தம் எதிர்கொண்ட பிரச்சனைகள், கடுமையான உணவு தட்டுப்பாடு நாளாந்தம் தெருவில் பயணிக்கையில் என்ன நடக்குமோ என்று தெரியாத ஒரு நிச்சயமற்ற நிலை, ஆட்கடத்தல்.... என பல பிரச்சனைகள். இரவில் வீட்டில் படிப்பதற்கு விளக்கிற்கு மண்ணெண்ணெய் (Kerosene), மின்சாரம் என்பன சரியாக கிடைக்காத நிலை கடினமான சூழ் நிலைகளிலும் அவர்கள் கற்று தேறி இருக்கிறார்கள் அதற்கு அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

அப்போது 1கிலோ அரிசியின் விலை 250 ரூபாக்கும், தீக்குச்சிகள் தீபெட்டிகளாக அல்லாமல் குச்சிகளாக வாங்க வேண்டி இருந்ததாகவும் தொலைபேசி உரையாடல் மூலம் அறிந்து கொண்டேன். நான் தொலைபேசி மூலமும் இணைய செய்திகள் மூலமும் அறிந்ததை வைத்து அங்குள்ள சூழ் நிலையை வர்ணிப்பதை விட நேரே அங்கிருப்போராலேயே எழுதப்பட்ட முரண்வெளி கட்டுரை அங்குள்ள சூழ் நிலையை தெளிவாகவே உங்களுக்கு தரும் என்று நம்பலாம்.

இந்த பெறு பேறுகளை வைத்து கொண்டு அங்கு நிலவும் சூழல் எவ்வளவு பின்னடைவை ஏற்படுத்தியது என்பதை கணிப்பது சிரமம். உயர்தர பரீட்சை முடிவுகளையும், அதன் பின்னான பல்கலைகழக அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் தெரியவரும் போதே இப்போதைய சூழ் நிலையின் தாக்கத்தை சரியாக உணர முடியும்.

1990 களில் இருந்தே பொருளாதார தடை, மின்சாரமின்மை, மண்ணெணெய் தடை, இதனால் விளக்கொளி கூட சரியாக கிட்டாத நிலை, இடப்பெயர்வு, பாடசாலைகள் சீராக இயங்காமை என்பவற்றுக்குள்ளால் தான் மாணவர்களின் கல்வியும் மக்களின் வாழ்க்கையும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் 2000 ஆம் ஆண்டில் இருந்து நிலவிய ஒரு தற்காலிக சுமூக நிலை அதற்கு பழக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக ஏற்படும் நெருக்கீடுகளை சகித்து அவர்களின் திறமையை வெளிகொண்டு வர முடிந்ததில் மகிழ்ச்சியே.



1990 களிலான பொருளாதார தடையை எப்படி மக்கள் எதிர் கொண்டார்கள் என்பதை எழுத மட்டுமே பல பதிவுகள் வேண்டும்.

அப்போதைய வாழ் நிலை, குழந்தைகள், சாதாரண பேச்சு வழக்கு சொற்களை அறியும் முன்னமே போர் உபகரணங்களின் பெயர்களை உச்சரிக்க தொடங்கி இருந்தார்கள். அதை பற்றி சக பதிவரான ஹரனின் பதிவில் இருந்து

" 'சீ' பிளேன் (கோள் மூட்டி) அஃப்ரோ, புக்காரா, சகடை, கெலி (மணிக் கெலி, முதலைக் கெலி, மற்றும் பல), பொம்பர், சுப்பர் சோனிக், கிஃபிர் ஆகிய சொற்களே எம் ஈழத்துக் குழந்தைகள் அம்மா, அப்பா சொல்லும் முன்னரே சொல்லத் தெரிந்து கொள்ளும் வார்த்தைகள். ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவராலுமே எவ்வகையான பிளேன், அல்லது கெலி வானில் வருகின்றது என்பதனை அதனைப் பார்க்காமலேயே, அதன் சத்தத்தினை வைத்துக் கூறக் கூடியதாக இருந்தது.

சிறுபிள்ளைப் பராயத்தில், ஏதுமறியா வயதினிலே வானில் பறக்கும் விமானத்தைப் பெருமூச்சுடன் அண்ணார்ந்து வேடிக்கை பார்த்த காலம் மாறிப் போய்; தலைதெறிக்கக் கால் கடுக்க உயிரைக் கையிற் பிடித்தபடி ஓடத் தொடங்கிய காலம் வந்தது, ஓடிப் பதுங்கு குழிக்குள் பகல் இரவாய்ப் பதுங்கும் நிலை வந்தது."



அப்போதும் மண்ணெண்ணெய்க்கான தடை இருந்தது. உழவு இயந்திரங்கள் டீசலுக்கு பதிலாக மரக்கறி எண்ணெய் (Palm oil)பாவித்தும், மோட்டர் சைக்கிள்கள் மண்ணெண்ணெயிலும் ஓடி திரிந்தன. அப்போதைய காலத்து படம் பார்த்தலை பற்றி கானா பிரபா அண்மையில் ஒரு பதிவை எழுதி இருந்தார்.

மண்ணெண்ணேய் தட்டுபாடான சூழலில் படிப்பதற்கு விளக்கிற்கு மண்ணெண்ணெய் வாங்குவதே மாணவர்கள் உள்ள வீடுகளில் ஒரு பெரும் சுமையான விடயம். அந்த நேரம் பாவனையில் இருந்த விளக்கான ஜாம் போத்தல் விளக்கு பற்றி வசந்தன் ஒரு பதிவு எழுதி இருந்தார்.



எங்கள் வீட்டில் நான் ஒராள் மட்டும் தான் படிக்கும் வயதில், அதனால் எனக்கென படிப்பதற்கு ஒரு பெரிய மேசை விளக்கு தரப்பட்டிருந்தது. இது எல்லா வீடுகளிலும் சாத்தியபடும் விசயமாக இருக்காது.
அத்தோடு முழுமையாக விவசாயம் செய்வதற்கு போதுமான மண்ணெணெய் கிடையாத சூழல், பல தொழில் துறைகளும் முடங்கி போய் இருந்த காரணத்தால் பலர் விறகு, தேங்காய் பொச்சு என்பவற்றை சைக்கிளில் கட்டி விற்று வாழ்க்கையை ஓட்டினார்கள்.



படம்: அப்பால் தமிழ் இணையம்



படம்: கூகுல் தேடுபொறியின் தேடலில் கிடைத்தது

இப்படியானா வாழ்க்கை போராட்டங்களோடு தான் நாளாந்த வாழ்க்கை இருந்தது அப்போது.

ஆனால் பல்கலை கழக அனுமதிக்காக நடாத்தப்படும் க.பொ.த. உ/த பரீடசையில் பல தடவை யாழ்மாவட்ட மாணவர்கள் கணித பிரிவில் அகில இலங்கை மட்டத்தில் முதல், இரண்டாம் , அல்லது முதல் 10 மாணவர்களில் ஒருவராக பெறு பேறுகளை பெற்ற சந்தர்ப்பங்கள் அதிகம்.

போரின் தாக்கத்தால் உயர் தர பெறு பேறுகளில் யாழ்மாவட்டம் சடுதியான வீழ்ச்சியை சந்தித்த 2 சந்தர்பங்களை அவதானித்திருக்கிறேன்.

1. 1995 இடப்பெயர்வுக்கு பின் நடந்த 1996 உயர் தர பரீட்சை பெறு பேறுகள்.
2. 1999- 2000 யாழ்குடாவை மீள கைப்பற்றும் முயற்சியின் போதான காலப்பகுதி.


1995 முன்னேறி பாய்தல் நடவடிக்கை நடந்த அண்மைய காலப்பகுதியில் தான் 1995 ஆம் ஆண்டுக்கான உயர் தரபரீட்சைகள் நடை பெற்றன. ஆனால் அந்த பரீட்சை பெறு பேறுகளில் அதிக வீழ்ச்சி தெரியவில்லை. ஏன் எனில் மாணவர்கள் பரீட்சைக்கு தயார் படுத்தும் காலப்பகுதியில் போர் பயம் இருந்தாலும் படிக்க முடிந்தது. ஆனால் அதன் பின்னர் மக்களின் பாரிய இடப்பெயர்வின் பின் நடந்த உயர் தரபரீட்சை பெறு பேறுகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

அதற்கு உதாரணமாக
வருடாந்தம் 60- 64 மாணவர்கள் அனுமதி பெறும் மருத்துவத்துறைக்கு அந்த வருடம் 39 மாணவர்கள் மட்டுமே அனுமதி பெற்றிருந்தனர் என்பதை வைத்து சொல்ல முடியும்.

பொதுவாக அப்போதிருந்த பல்கலை கழக அனுமதி வெட்டு புள்ளி முறையை பார்த்தால் (இப்போது Z-score எனும் முறை எப்படி செயற்படுத்துகிறார்கள் தெரியாது).

மருத்துவ துறைக்கு 900 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்
அவர்களில்
a) 40% (சரியாக ஞாபகம் இல்லை) அகில இலங்கை ரீதீயிலான திறமை அடிப்படையிலும், அதாவது முழு இலங்கை ரீதியிலும் முதல் 360 இடங்களுக்குள் வந்தவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
b) மிகுதி 60% மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை அடிப்படையிலும் கல்வி, பின் தங்கிய மாவட்டம் எனும் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர்.(இதில் மாவட்ட அடிப்படை என தனியாகவும், பின் தங்கிய மாவட்டங்கள் என பட்டியல் இடப்பட்ட மாவட்டங்களுக்கு ஒரு குறிபிட்ட சதவீதமும் அனுமதி இருகும்)

(இலங்கை பல்கலைகழக அனுமதி பற்றிய விபரங்களையும் யாரோ வலைப்பதிவில் எழுதி இருந்தார்கள் யார் என தெரியவில்லை)


அதன் படி அண்ணளவாக 24 மாணவர்கள் யாழ்மாவட்டதிலிருந்து தெரிவு செய்யப்படுவர்.

மருத்துவ துறைக்கு 64 மாணவர்கள் மொத்தமாக யாழ்மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யபடும் போது அவர்களில் 40 பேர் அகில இலங்கை திறமை அடிப்படையிலும், 24 மாணவர்கள் யாழ்மாவட்ட அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள் என எடுத்து கொள்ள முடியும்.

(மேலே சொல்லப்பட்ட கணித்தல் பல்கலைகழக மனியங்கள் ஆணைக்குழு மாணவர்களுக்கு அனுப்பும் கையேட்டை வாசித்து நான் புரிந்து கொண்டதை வைத்து சொல்லி இருக்கிறேன்)

ஆனால் எமது மாணவர்களில் பலர் வருடாந்தம் 64 பேருக்கு சராசரியாக மருத்துவத்துறைக்கு அனுமதி கிடைக்கிறது. அதே போல 1996 ஆம் வருடமும் கிடைக்கும் என கணக்கு போட்டனரே தவிர, அகில இலங்கை ரீதியில் யாழ்மாவட்டத்தில் இருந்து திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்படக்கூடிய எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததை கவனிக்கத் தவறி விட்டனர். இதனால் மருத்துவத் துறை கிடைக்கும் என கற்பனையில் இருந்து அது கிடைக்காது ஏமாற்றம் அடைந்தனர்.


ஆனாலும் தொடர்ச்சியாக பல்கலை கழக அனுமதிக்கான வெட்டு புள்ளிகளில் கொழும்புக்கு அடுத்த படி பொறியியல் பிரிவுக்கு அதிக வெட்டு புள்ளிகள் நிர்ணயிக்கப்படும் மாவட்டமாக யாழ்மாவட்டமே இருந்து வந்திருக்கிறது. மருத்துவ துறைக்கு கொழும்பு, காலிக்கு அடுத்து முன்றாம்/ நான்காம் நிலையில் வெட்டு புள்ளிகள் யாழ் மாவட்டத்துகே நிர்ணயிக்கப்படுவது வழமை.
அதாவது இடப்பெயர்வு, பொருளாதார தடை, போரின் தாக்கத்துக்கு முகம் கொடுத்து இலங்கையின் போரின் வீச்சுக்கு முகம் கொடுக்காத ஏனைய மாணவர்களுக்கு சமனாக பெறு பேறுகளை பெறுவதென்பது பாராட்டப்பட வேண்டிய விசயம்.
ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் அனுமதி பெறும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் வீழ்ச்சியடைந்து வரும் என்றே நினைக்கிறேன். அது கவலைக்குரியது.

இறுதியாக
"நிலவொளிப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இணையாக பெறு பேறுகளை பெறுகிறார்கள்"
என்ற நிறை அன்பு I.A.S என்ற கூற்று ஈழத்து தமிழ் மாணவர்களுக்கும் பொருந்தும்.

Wednesday, 25 April 2007

ஊரடங்கில் ஒரு திருவிழா

யாழ்குடாவில் கோயில் இல்லாத ஊர் என்று எதுவும் இருக்காது. எங்கள் ஊரும் அதற்கு விதிவிலக்கல்ல. வருடாந்த திருவிழாக்கள் நடைபெறும், அல்லது விசேடமான திருவிழாக்கள் நடைபெறும் 3 முருகன் கோயில்களும் ஒரு பிள்ளையார் கோயிலும் இருந்தாலும், பிள்ளையார் கோயில் திருவிழா தான் பிரபலமாகவும், அதிக மக்கள் கூடும் திருவிழா ஆகவும் இருக்கும். அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று திருவிழா நடைபெறுவது ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறைக்காலத்தில் என்பதாகும். நல்லுர் கந்தசுவாமி கோயிலிலும் எமது ஊர் பிள்ளையார் கோயிலிலும் ஒரே நாளில் கொடியேற்றம் நடைபெற்றாலும், எமது ஊர் கோயிலில் 10 நாள் திருவிழாவே நடைபெறும்.

பதின்ம வயதிற்கு முன்பும், பதின்ம வயதின் ஆரம்ப காலத்திலும் திருவிழா காலத்தில் காலையில் எழுந்து குளித்து, எங்கள் வீட்டில் வேலி போல நிறைய வளர்த்திருந்த செவ்வரத்தை மரங்களில் பூத்திருக்கும் பூக்களை ஆய்ந்து கொண்டு பூசை 9 மணிக்கு ஆரம்பிக்கும் என்றால் 8 மணிக்கே கோயிலுக்கு போய் விடுவது வழக்கம். அங்கு போய் பூக்கள் சேகரிப்பதற்கு என இருக்கும் ஒரு அறையில் மற்றையவர்கள் கொண்டு வரும் பூக்களை சேகரிப்பதும், யாரும் றோஜா பூக்கள் கொண்டு வந்தால் அன்றைய எழுந்தருளி பிள்ளையாருக்கு சாத்துவதற்கு அவற்றை கொடுப்பதும், பெரிய பூக்களை பிரித்து சுவாமி வலம் வரும் போது பூ சொரிவதற்கும் கொடுப்பது வழக்கம்.
சுவாமி வலம் வரும் போது வீசப்படும் சாமரம் பொதுவாக சிறுவர்களிடமே கொடுக்கப்படும் என்பதால் 6-9 வயதுக்கு இடைப்பட்ட வயதில் வசந்த மண்டப பூசை ஆரம்பிக்கும் போது மண்டப வாசலில் முதலாவதாக இடம்பிடித்து இருப்பதும், பூசையின் போது சாமரம் வீச தயாராய் எழுந்து நின்று அதை எனக்கு போட்டிக்கு இருக்கும் சக தோழர்களிடம் சென்று விடாமல் அடிபட்டு வாங்குவதும், அதில் வென்று சாமரம் கையில் கிடைத்தால் வரும் புழுகத்துக்கும் அளவிருக்காது. அதே போல மாலை பூசை என்றால் தீவட்டி பிடிப்பதற்கு போட்டி வரும். தீவட்டி ஏந்துபவர் மாலை சுவாமி வெளி வீதி வலம் வரும் சகடையில் ஏறி இருக்கலாம். அதற்காகவே போட்டி வரும். போட்டி வந்து மாலை பூசை 6 மணிக்கு ஆரம்பமாகும் என்றால் 4.30-5.00 மணிக்கே போய் தீவட்டியை எடுத்து ஒழித்து வைத்து பூசை தொடங்கும் நேரமாக போய் அதை எடுத்து எரிய விடுவதும் நடக்கும். பொதுவாக நான் தீவட்டி பிடிக்க அதிகம் போவதில்லை. 2-3 முறை பிடித்த ஞாபகம்.

பதின்ம வயதின் ஆரம்பத்தை அடைந்து விட்டால் கொஞ்சம் புறமோசன் கிடைச்ச மாதிரி. வீதி வலம் வரும் எழுந்தருளி பிள்ளையார் ,முருகன் விக்கிரகங்களை பெரியவர்களும், சண்டேசுரர் விக்கிரகத்தை சிறுவர்களும் தோளில் காவுவது வழக்கம். பதின்ம வயதிலை சண்டேசுரரை காவுவதற்கு போட்டி. அதனால் சுவாமி காவ பயன்படும் பிள்ளை தண்டை காவ விரும்புபவர்கள் எடுத்து ஒழித்து வைப்பது வழக்கம்.

திருவிழாக்கள் போர் காலங்களிலும் எந்த வித தடங்கலும் இல்லாமல் நடப்பது வழமை (ஆனால் அது பொய்த்து போனது யாழ்குடா இராணுவ கட்டுபாட்டில் வந்த பின்னான 1999-2000 ஆண்டு காலப்பகுதில்)

எத்தனையாம் ஆண்டில் என சரியாக ஞாபகத்தில் இல்லை. 1990 களின் ஆரம்பம்; போர்க்காலம். சிறி லங்காவின் வான்படை யாழ்குடா நாட்டின் வான் பரப்பை ஆக்கிரமித்திருந்த நேரம் அது. இரவு பகல் என்று பாராமல் ஊரடங்கு சட்டம் இடப்பட்டிருந்த ஒரு காலமும் இருந்தது. மக்கள் கூட்டமாகவோ அல்லது தெருவில் வாகனங்களோ சென்றால் ஹெலிகள் திரத்தி திரத்தி தூப்பாக்கி சூட்டை நடத்துவதும், துணைக்கு குண்டு வீச்சு விமானங்களை அழைத்து குண்டு வீச்சு நடப்பதும் அப்போதைய சாதாரண நிக்ழ்வுகள். பிரதான வீதிகளில் சென்று கொண்டிருக்கும் போது ஹெலி சத்தம் கேட்டால் போகும் பாதையை மாத்தி உள்ளே மரங்கள் அடர்ந்த ஒழுங்கைகளுக்குள் சைக்கிளை செலுத்திசெல்வதும் நாளாந்த நிகழ்வுகள்.

ஆனால் அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் தொடரும் என்பது போல நாளந்த நிகழ்வுகள், கோயில் திருவிழாக்கள் என்பனவும் நடந்து கொண்டிருந்தன.

எமது ஊர் கோயில் திருவிழா ஒரு வருடம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்ட காலத்தில் வந்த காரணத்தால், திருவிழாவை நிறுத்தாமல், நடாத்துவதெனவும், ஆனால் கோயிலின் வெளி வீதியில் எந்த நிகழ்வுகளும் நடாத்துவதில்லை என்பதாகவும் தீர்மானித்தார்கள். அப்படி நடந்து கொண்டிருந்த ஒரு நாள் நானும் வழமை போல காலையில் பூக்களை பிடுங்கி கொண்டு வெள்ளணவே கோயிலுக்கு போய்விட்டேன். அன்று எப்படியும் சண்டேசுரரை காவ வேண்டும் என தீர்மானம். அதானால் வெள்ளணவே போய் பிள்ளை தண்டை எடுத்து பூசேகரிக்கும் அறைக்குள் ஒழித்துவிட்டு வழமை போல பூ சேகரிது முடித்து பூசை ஆரம்பமாக பூசை பார்க்க போய்விட்டேன்.

கொடிதம்ப பூசை நடந்து கொண்டிருந்த நேரம் ஹெலி ஒன்று வந்து சுற்றி சுற்றி சுட தொடங்கி விட்டது. ஹெலி சுடுவதும் மிக அருகாமையில் என்பது சத்தம் மூலம் விளங்கிவிட்டது. எல்லாருக்கும் ஒரு பயம் உளவாளி யாரும் திருவிழா நடப்பதை சொல்லி விட்டார்களோ என. ஐயரும் பூசையை நிறுத்திவிட்டு கொடி தம்பத்துக்கு முன்னால் இருந்து கண்ணை மூடி மந்திரம் உச்சரிக்க தொடங்கிவிட்டார்.
சிறிது நேரந்தில் குண்டு வீச்சு விமானமும் வந்து வானில் வட்டமிட ஆரம்பித்திருந்தது. அந்த சத்ததை கேட்டதும் அதிகம் பயந்தவர்களில் ஒரு பகுதியினர் கோயிலின் மூலஸ் தானத்துக்குள்ளும், சுற்றி இருந்த பரிவார தெய்வங்களின் ஆலயங்களுக்குள்ளும் நுளைந்து விட்டனர். அவை தான் பலமான தளம் கொண்ட கட்டிடங்கள், குண்டின் சிதறல்கள், ஹெலியின் துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத கனமானவை. மிகுதி கட்டிடம் ஓட்டு கூரை இவற்றில் எதையும் தாங்க மாட்டதவை. ஒரு அரை மணி நேரம் ஹெலியும், விமானமும் மாறி மாறி கோயிலுக்கு அண்மையாகவே குண்டு வீசி தள்ளின. எதற்கு என்பது கோயிலுக்குள் இருக்கும் போது தெரியாது. ஹெலியும் விமானமும் போன பின் சண்டேசுரர் தூக்கும் ஆசையும் போய், பிள்ளை தண்டு ஒழித்ததையும் மறந்து வீட்டை போட்டன். பிறகு பூசை தொடர்ந்து நடந்து, சுவாமி சுத்த பிள்ளை தண்டை தேடினா அது எங்க கிடைக்கும், நான் தான் ஒழிச்சு போட்டு வந்திட்டன். சண்டேசுரருக்கு எல்லா விக்கிரகங்களையும் விட சிறிய பிள்ளை தண்டு, மற்ற விக்கிரகங்களை காவ பயன்படும் பிள்ளை தண்டுகள் சண்டேசுரருக்கு பொருந்தாது. பிறகு தேடி களைச்சு, வெள்ளி கிழமையளிலை பிள்ளையார் உள் வீதி சுத்த பயன்படும் சிறிய சகடையிலை சுத்தினார்களாம், மாலை திருவிழாவிற்கு போன போது என்னோடு பூ செகரிக்கும் அறையில் சேர்ந்து நிற்கும் அண்ணா சொன்னார். அவருக்கும் நான் அங்கு தான் பிள்ளை தண்டை ஒழிச்சு வச்சன் எண்டது தெரியாது.

அன்று குண்டு விச்சுக்கு இலக்கானது வீதியால் சென்று கொண்டிருந்த, எங்கள் ஊரவர் ஒருவரின் பார ஊர்தி (Ashok leyland lorry). லொறி துப்பாக்கி சூட்டால் சல்லடை இடப்பட்டு, பாவனைக்கு உதவாத நிலைக்கு வந்திருந்தது. போட்ட குண்டுகள் அதன் மீது சரியாக விழாததால் சுக்கு நூறாகமல் உருவம் இருந்தது. அந்த லொறியை வைத்து மிகவும் வசதியக வாழந்த அவர்களது குடும்பம் அதை இழந்த பின் மிகவும் நொடித்து போய் விட்டது. அவரால் பழைய நிலைக்கு மீள முடியவில்லை. இப்போது நாட் கூலி வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றும் நிலையில் அவர்.

Monday, 26 March 2007

குண்டு போட்டவர்கள் மீது விழுந்த குண்டு.....



படம்: தமிழ்நெட்


விமான குண்டு வீச்சு பற்றிய ஞாபக பதிவை 4 நாட்களுக்கு முன் (சயந்தன் -சோமி இருவரின் குரல் பதிவு வந்த போது) எழுத வெளிக்கிட்டு பாதியிலேயே எழுதியதை அழிச்சு போட்டு விட்டிட்டன்.

கட்டுநாயக்க விமான தளம் மீதான் தாக்குதல் இதை எழுத மீண்டும் தூண்டியது.

சியாமா செட்டி,அவ்ரோ, வை 8, 12 (சரக்கு விமானங்கள் ஆனா குண்டும் போடும்), ஹெலி புக்காரா, கிபிர், ..... இப்படி பல விமானங்களின் குண்டு வீச்சுக்களையும் பார்த்து சிதறிய உடல்களை கண்டு பழகி இப்ப இஞ்சை வந்தா பிறகும் எதிர்பாரத நேரங்களிலை ஹெலியோ இல்லை பிளேனுகளோ பறந்தா என்னையறியாமலே ஒரு திகில், பயம் வந்து போகும்.
ஹெலி, 50, 90 கலிபர் துப்பாக்கியால் சுடும் போது பனை மரம் சுத்தின அனுபவம், பாடசாலைக்குள் இருக்கும் போது இந்திய இராணுவ தாக்குதல் நடந்து அதுக்கு வாங்குகளுக்கு கீழ ஒழிச்ச அனுபவம், மல்ரி பரல் (பல்குழல் எறிகணை) எமது வீட்டுக்கு மேலால் கூவி சென்று அடுத்த ஊரை துவசம் செய்ய, பயத்தொடு படுத்திருந்தது.... இப்பிடி கனக்க இருக்கு. அத மாதிரி கன பேருக்கு இருக்கும்.

இதிலை ஒரு குண்டு வீச்சு சம்பவம் பற்றின நினைவை மட்டும் சொல்ல போறன்.

அப்ப 1993, யாழ்தேவி (கொழும்பு யாழ்ப்பாணம் ஓடின ரயிலின் பெயர்) எண்ட பெயரிலை ஆனையிறவில் இருந்து கிளாலி நோக்கி யாழ்கடனீரேரி ஓரமாக இராணுவம் தக்குதல் நடத்தி முன்னேறின நேரம். (கிளாலி, சாவகச்சேரி, என்பவை தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள இடங்கள். சாவகச்சேரி சண்டை நடக்கும் இடத்திற்கு அண்மையில் இருக்கும் சந்தையுடன் கூடிய சன செறிவான நகரபகுதி.)
அப்ப சண்டை நடந்து வெடிகேட்டாலும், சோதினையள், பள்ளிகூடங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன.யாழ்தேவி இராணுவ நடவடிக்கை நேரம் எங்களுக்கு சோதினை ஒண்டு நடந்து கொண்டு இருந்தது.

ஒரு நாள் காலமை எங்களுக்கு சோதினை தொடங்கி ஒரு 1 மணித்தியாலம் இருக்கும் (3 மணி நேரம் ஒரு பாட சோதினை இருக்கும்). விமானங்கள், ஹெலி என்பனவற்றின் இரைச்சல் கேட்டக தொடங்கி இருந்தது. பயம் இருந்தாலும் சோதினை எழுதுவதில் தான் எங்கட சிந்தனை எல்லாம். ஆனா வந்த விமானங்கள் எமது பாடசாலை சூழலை வட்டமிட தொடங்கி இருந்தன.
விமானம் சுத்தும் சத்ததை வச்சு, விமானம் கிட்ட வருகிறதா? இல்லை தூரவா? விமானம் குண்டு வீச குத்துகிறதா? குண்டு வீசி மேலெழுகிறதா? என்பதை விமானத்தை பாக்காமலே மூடிய ஓரிடத்திலை இருந்து அனுமானிக்க கூடிய அளவுக்கு எங்களுக்கு அனுபவம் வந்திருந்தது.
பரீட்சை நிலையம், எமது பாடசாலை பிரதான மண்டபம், மற்றும் அதனோடு இணைந்த ஒரு மாடி கட்டிடத்தின் தரை தளம். பிரதான மண்டபத்தில் ஆண்களும், அடுத்த மாடி கட்டிட்டத்தின் தரை தளத்தில் பெண்களும் சோதினை எழுதி கொண்டிருந்தோம்.
விமானங்கள், ஹெலியின் வட்டமிடல் நாம் இருக்கும் இடத்தை மையம் வைத்து இருப்பதை உணர்ந்த போது மனம் படபடக்க தொடங்கினாலும், கட்டிடத்துக்கு வெளியே பாதுகாப்பு தேடி போவதால் ஏதும் வந்துவிடப்போவதில்லை என்பதும்,அத்தோடு சோதினை எழுதிய குறை வேறு. பொடியள் எல்லாரும் விமான பறப்பு சந்தம் கிட்டவா கேட்டா, குண்டு போட குத்துற சத்தம் கேட்டா சோதினை எழுதி கொண்டிருக்கிற மேசைக்கு கீழ போறதும், விமானம் தூர போக வெளீல வந்து எழுதுறதுமா இருந்தம்.மேசைக்கு கீழ போய் இருக்கிறதாலை எந்த பாதுகாப்பும் இல்லை எண்டாலும் ஒரு மன ஆறுதலுக்கு மட்டுமே அந்த முயற்சி.

ஆனா பெண்கள் குண்டு விழுந்து வெடிச்ச உடனம் வெளீல சத்தம் போட்டு கொண்டு வெளி விறாந்தைக்கு வாறதும், சோதினை மேற்பார்வையாளர்கள் அவர்கள் மேலும் வெளீல போகமல் உள்ள போக பண்ணுறதுமா இருந்திச்சினம்.
குண்டுகள் அண்மையாகவே வீசப்பட்டு சத்தங்கள் கேட்டாலும் எம்மால் வெளியே உடனே போக முடியாது. போனாலும் பயன் இல்லை.

குண்டு வீசி முடிந்து விமானங்கள் போன பின், சோதினையை குறையிலேயே நிறுத்தி விட்டார்கள். ஏன் எண்டா சண்டை நடக்கும் போது, மீண்டும் மீண்டும் வந்து குண்டு வீசுவார்கள்.
சோதினை மண்டபத்துக்கு வெளியே வந்து பார்த்த போது சாவகச்செரி நகரத்தில் இருந்த எரிபொருள் (மண்ணேணெய்) விறபனை நிலையங்கள் பாதிப்புக்குள்ளாகி எரிந்து கொண்டிருந்தன. ஆனால் அங்கு போக யாரும் தாயாரில்லை. அடுத்த சுற்று குண்டு வீச வரமுன் வீட்ட போக வேணும் எண்டது தான் எல்லாரோட நினைப்பும். உடன வீட்ட போட்டம். எதிர் பாத்த மாதிரியே அண்டைக்கு பின்னேரம் மீண்டும் விமானங்கள் குண்டு வீச வந்தன. அந்த நேரம் எமது பாடசாலையை அண்மித்தா இருக்கிற ஒரு பதுங்கு குழிக்கு 2 / 3 வீட்டு ஆக்கள் ஓடி போய் பாதுகாப்பு தேடி இருக்கிறார்கள். அதை சுத்தி சுத்தி வட்டமிட்ட விமானிகளும் அவதானித்து அந்த பதுங்குகுழியை இலக்கு வைத்து குண்டு வீசியதில் அந்த பதுங்கு குழிக்குள் இருந்த 8 பேர் இறந்து போனார்கள்.
அதில் எமது வகுப்பு தோழியும் ஒருத்தி, அவரும், அவரது அப்பா, அக்கா என 3 பேர், இன்னும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 8 பேர். காலையில் சோதினையில் சந்தித்த தோழி மலை பாதுகாப்பு தேடிய பதுங்கு குழிக்குள்ளேயே பிணமான அவலம். இன்றும் மறக்க முடியாது. அவர்களது குடும்பத்தில் தாயும், சகோதரன் ஒருவரும் அன்று வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார்கள்.

ஆண் பெண் வகுப்புக்கள் வேறு வேறானவையாக பாடசாலையில் இருந்தாலும், அந்த தோழியும், நானும் ஒரே தனியார் கல்விநிலையத்தில் கல்விகற்றோம். அவருடன் 1/ 2 முறை சில வார்த்தை மட்டுமே கதைதிருந்தாலும் அவரின் மீது மதிப்பிருந்தது. அந்த தோழி ஒரு நல்ல விளையாட்டு வீராங்கனை, எமது பாடசாலைக்கு மாவட்ட போட்டிகள் வரை சென்று வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார். அதுடன் அவர் வகுப்பில் இருந்தால் எப்போதும் பெண்கள் பக்கம் கல கலப்பாகவே இருக்கும். அதனாலேயே எங்கள் ரியூசனில் எல்லாருக்குமே அவரை பிடிக்கும்.

இதே போல இன்னுமொரு குண்டுவீச்சில் எமக்கு முதல் வகுப்பில் படித்த ஒரு அண்ணாவும், அவரது சகோதரியும் பதுங்கு குழிக்கு மேல் விசிய குண்டில் இறந்து போக, அவர்களது அப்பா அம்மா வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார்கள். ஆனால் அவர்களது இரண்டு பிள்ளைகளுமே இறந்து போனார்கள்.


இறுதியா சயந்தன் சொன்னது போலவே கட்டு நாயக்க மீது தாக்குதல் நடந்ததாம் எனும் போது மனத்தில் ஏற்பட்ட இனம்புரியாத ஒரு பூரிப்பு. அதில் ஏற்பட்ட மனித இறப்புக்களை பற்றி கவலைப்படவும் முடியவில்லை. வலைப்பதிவில் பல சந்தர்ப்பங்களில் இராணுவ இறப்பும் ஒரு மனிதனின் இறப்பு தானே, அவனுக்கும் உறவுகள் இருக்கிறர்கள் தானே என அந்த இறப்பை பார்த்து சந்தோசப்பட முடியாது/ கூடாது என்பதாக சொல்லி இருந்தார்கள். எய்தவன் இருக்க அம்பை ஏன் நோவான் என்ற கருத்தும் வந்திருந்தது.

ஆனால் குண்டுகள் வீசும் போது, ஹெலி, சி பிளேன் போற விமானங்களின் வழிகாட்டலுடன், சுற்றி வட்டமிட்டு இலக்கு பார்த்து பொது மக்களது வீடுகள் மீதும், பாதுக்கப்புக்கு பதுங்கிய பதுங்கு குழி மீதும், அடைக்கலம் தேடிய ஆலயம் மீதும் குண்டு வீசுபவர்களின் இறப்பை பார்த்து அவர்களும் மனிதர்கள் தான் என சொல்லும் பக்குவத்தை நான் இன்னும் அடையவில்லை.

Sunday, 25 March 2007

சுண்டினா சிவக்கிற சிவப்பு !!

மொழி படம் பார்த்தேன். வலைப்பதிவில் பலரும் எழுதியதை போல படம் நன்றாகவே இருந்தது. அதை விட மேலதிகமாக நான் என் பங்குக்கு விமர்சனம் எழுத விரும்பவில்லை. (விமர்சனம் செய்ய தெரியா எண்டே சொல்லலாம்)
படத்திலை ஒரு நகைச்சுவை காட்சி வரும்.

பிரகாஸ்ராஸ், பிரித்வி இருவரும் புதிதா போன அப்பாட்மெண்ட் இன் செயலாளர் பச்சிலேர்சுக்கு வீடு வாடைக்கு கொடுப்பதில்லை என்பதாக. அதன் பின்னணியில்

பிரகாஸ்ராஜ்: பிரித்விய கல்யாணம் செய்ய சொல்லி, பிரித்விகிட்ட அம்மா பார்க்கிற பொண்ண கல்யாணம் செய்ய சொல்லுவார்

பிரித்தவிராஜ: கல்யாணம் தானா அமையணும், பொண்ண பாத்த உடன தெரியணும், அவகூட வாழணும் என்பதாக

பிரகாஸ்ராஜ்: அதெப்பிடிடா தெரியும்
பிரித்த்விராஜ்: நடக்கணும், கமேடி புக்கில சொன்ன மாதிரி தலைக்கு மேல பல்ப் எரியணும், மணி அடிக்கணும் என்பார்

பிரகாஸ்ராஜ்: அப்பிடி பல்ப் எரியணும் எண்டா நீ எலக்ரீசியனாவோ இல்லை சேர்சிலை மணி அடிக்கிறவனாவோ இருக்கணும் எண்டு.


அதே மாதிரி எங்கட பள்ளி காலத்திலையும் ஒரு நண்பி தனக்கு வரும் கணவனை பற்றிய எதிர்பார்ப்பை சொன்னார்.
தனது கணவன் தன்னை விட மேலான ஒரு இடத்தில் (ஸ்டேடஸ்), நல்ல சிவப்பா இருக்க வேணும் என்பதாக. அதை வைத்து எமது வகுப்பில் ஒரு நகைச்சுவையே உருவாக்கி இருந்தார்கள். பின்னர் அந்த நகைச்சுவை பள்ளி படிப்பு முடித்து வெளியேறும் போது எமக்கு கொடுக்கப்பட்ட பிரியாவிடை மலரிலும் ஒரு காட்டூனாக இடம்பெற்றது.
அந்த காட்டூனை கீழே இணைத்துள்ளேன்.




அந்த தோழி தனக்கு பிடித்த ஒருவரை மணம் முடித்து இப்போ மகிழ்வாக இருக்கிறார். ஆனால் அவர் பள்ளி பருவத்தில் சொன்ன நிபந்தனைகளை அவரது தெரிவு நிறைவு செய்ததா என்பது தெரியவில்லை.

Saturday, 24 March 2007

சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்


"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்"


இந்த 2 வரிகளையும், இதை இயற்றியவர் மகா கவி எனும் கவிஞர் என்பதையும் 1999 ஆண்டில் அறிந்து கொண்டேன். அதை அறிவதற்கு காரணமான சம்பவம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வுடன் இணைந்தது என்பதால் இரு வசனங்களும் அடிக்கடி நினைவில் வந்து வந்து போகும்.
அதனாலேயே இந்த இரு வரிகளையும் எனது வலைப்பதிவின் மகுட வாக்கியமாக இணைத்து கொண்டேன்.

எனது வலைப்பதிவை ஆரம்பிக்கும் போது இப்பாடலை பற்றி வினாவிய போது
இப்பாடலை எனக்கு தந்தவர் திரு. இராஜன் முருகவேள் அவர்கள். அவருக்கு எனது நன்றிகள்.


பாடலை கேடக:

Track 03.mp3



படியவர்: திருச்செல்வம்

பாடல் வரிகள்: மஹாகவி
மஹாகவி பற்றிய விபரம் தமிழ் விக்கிபிடியாவில் இருக்கிறது.
http://ta.wikipedia.org/


பாடல் வரிகள்.

ஏலேலம் ஏலேலம் ஏல வலை ஏலேலம்
ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோ ததேய் தாம் ஏல ஏலோய் ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா....

ஆண்:
சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
(சிறு நண்டு)


பெண்:
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயமொன்று காணும்
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயமொன்று காணும்

ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோய் ததேய் தாம் ஏல ஏலோய்

ஆண்:
வெறுவான வெளி மீது மழை வந்து சேரும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்

வெறுவான வெளி மீது மழை வந்து சேரும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்

பெண்:
நெறி மாறு கடலூடு சுழி வந்து சூழும்
நிலையானா தரை நீரில் இலைபோலியாடும்???
நெறி மாறு கடலூடு சுழி வந்து சூழும்
நிலையானா தரை நீரில் இலைபோலியாடும்???

ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோ ததேய் தாம் ஏல ஏலோய்
ஆண்:
சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
(சிறு நண்டு)

பெண்:
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயமொன்று காணும்


ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோ ததேய் தாம் ஏல ஏலோய்.......

Sunday, 11 March 2007

உப்பு தூள் மாங்காய்

உப்பு தூள் மாங்காய் யாருக்காவது வாய் ஊறுதா?

பள்ளிப்பருவத்திலை எத்தினை பேர் களவாய் மாங்காய் ஆய்ஞ்சு, உப்பு தூளோட சாப்பிடிருக்கிறியள்? அந்த நேரம் எந்த மாங்காய திண்டாலும் ருசியா தான் இருக்கும். ஆனா மாங்காய சாப்பிட சேலம், பச்ச தின்னி மாங்காய்கள் தான் திறம்.
அதிலையும் மாங்காய கத்தியால வெட்டாம மரத்திலை குத்தி திண்டா அதிலை ஒரு சுவை இருக்கு.

கானா பிரபா நல்ல ஒரு பதிவே போட்டிருந்தவர்.
அப்பிடி எல்லாம் அதிகமா எழுதேல்லை நான் இப்ப சும்மா படங்காட்ட தான் வெளிக்கிட்டனான். அதுக்கு உப்பையும் தூளையும் இழுத்தன் வேற ஒண்டுமில்லை.

அண்டைக்கு இலுப்பங்காய மாங்காய் எண்டு அடையாள படுத்தின்னியள். இண்டைக்கு இதிலை போட்டிருக்கிற மாங்காயளிடை பேருகளை சொல்லுங்கோ ;)

கடைசியா இருக்கிறத மா எண்டு சொல்லி போடதங்கோ :)